பக்கம்:அமுதும் தேனும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமுதும் தேனும்

76


பொருள்மீதும், பொருளைவிடப் புதல்வர் மீதும்,
புதல்வர்தமைக் காட்டினும்தன் உடலின் மீதும்,
அரியவுடல் அதனினும்ஐம் பொறிகள் மீதும்
அவற்றினுக்கும் மேலாம்தன் உயிரின் மீதும்
பிரியம்வைக்கக் கூடியவன் மனிதன். என்றன்
பிரியமெல்லாம் என்னருமைப் பெண்மீதேதான்.
விரிவுரைநான் ஆற்றுதற்கு விரும்ப வில்லை.
வித்தகனே ஏற்றுக்கொள் இவளை என்றான்.


எல்லைகொண்டான் இவ்வாறு கூறச் செய்யுள்
எதுகை கொண்டான் அதுகேட்டு மகிழ்ந்தான்.இன்ப வல்லிகொண்டான் வாழ்வுதந்தான் என்று, ராஜா
மன்சிங்கும பீர்பாலும் மகிழ்ச்சி கொண்டார்.
கொல்லிகொண்டான் எனும்கொங்கு நாடன் கேட்டுக்
குதுகலித்துப் பாராட்ட லானான். தெய்வம்
இல்லையுண் டென்பதுபோல் சந்தே கத்திற்
கிடமளிக்கும் இடையுடையாள் மகிழ்ச்சி யுற்றாள்.


படைநடத்தி வெற்றிபெற்ற பாபர் பேரன்;
பார்புகழும் பேரரசர் அக்பர், பச்சைக்
கொடிபறந்த மாளிகையில் திரும ணத்தைக்
கோதைக்கும் அவனுக்கும் நடத்தி வைத்தார்.
தொடுமுரிமை பெறலானார் திரும ணத்தால்!
துணைவாழ்வு பெறலானார் ஒரும னத்தால்,
கடவுள்துணை இல்லாமல் இரண்டு பேரும்
கண்துணையால் காதலித்தார். இன்பம் கண்டார்.