பக்கம்:ஆகாயமும் பூமியுமாய்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 அப்பரும்-அப்பாவும் உடனே அவர் மார் பின் முடி விற்கும், வயிற்றின் தொடக்கத்திற்கும் எல்லைக்கோடான நெஞ்செலும்புக் கூட்டின் இடைவெளியில், ஒற்றை உத்திராட்சக் கொட்டையுடன் முற்றுப்பெற்ற மாலை முனையை ஒரு கையில் பிடித்து, அந்த மாலையைக் கழற்றாமலே சுருட்டிக்கொண்டார். ஒரு கைக்குள்ளேயே மறைத்துக் கொண்டார். இப்போது, அவள் இன்னொரு கையிலுள்ள பூக் கூடையைப் பார்ப்பதுபோல் இருந்தது. கையசையமாலே அந்தக் கூடை ஆடியது. அவள் கண்களே அதை ஆட்டி வைப்பதுபோல் தோன்றியது. இசக்கியா பிள்ளை, கால்களை அங்குமிங்குமாய்த் தேய்த்தபடி, சிறிதுநேரம் காலடி வட்டத்திற்குள்ளேயே ஒற்றைக்காலில் சுற்றினார். பிறகு அவள் சொன்னதைக் கேட்காததுபோலவும், அவள் பார்த்தது கண்களில் படாதது போலவும், பாவனை செய்தபடியே பூஜை அறை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். மகளிள் இன்னொரு கேள்வி அவர் உடம்பைக் குலுக்கியது. "பூஜை அறை இருக்கறதுக்கு, இந்த வீட்டுக்கு என்ன யோக்கியதை இருக்குது?" இசக்கியா பிள்ளை, பூஜையறையில் துணிக்கதவு போலான அந்தத் திரைச்சிலையைப் பார்த்தார். ஒரு கையில் திரிசூலமும், மறுகையில் உடுக்குமாய்க் காட்சி காட்டும் அந்தச் சீலையில் பொறித்த திரிபுர சுந்தரியையே பார்த்தார். மகளை மாதிரியே அம்மாவின் முகம். 'ஒன்னைத்தான் பார்க்கிறேன்' என்பது மாதிரியான பிரிந்தும் பிரியாதது போன்ற உதட்டோரச் சிரிப்பு. அழுத்தமான பார்வை. அங்கேயே அப்படியே அசைவற்று நின்றார். 'அம்மா எனக்கு பூஜை செய்ய யோக்கியதை இல்லையாம்மா? சொல்லும்மா!' அம்மாவே சொல்ல வந்ததுபோல், சமையலறையில் இருந்து, முகத்தில் பவுடர்போல் அப்பிய கோதுமை