பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

ஆழ்கடலில்


காலங் கடந்த, கண்டங் கடந்த, சாதி சமயங் கடந்த அத்தகு உலகப் பொது நூல்-உலகப் பொது மறை திரு வள்ளுவரின் தெவிட்டாத திருக்குறளன்றோ? வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு' என்று சுப்பிரமணிய பாரதியார், திருக்குறள் உலகப் பொது நூல் என்பதற்கு நற்சான்றிதழ் (Certificate) கொடுத் திருப்பதாகக் கூறுவது வழக்கம். இல்லை, இஃது அவரது சொந்தச் சரக்கு இல்லை. ஒருவேளை அவ்வாறே எடுத்துக் கொண்டாலும், இக்கருத்தை முதலில் வெளியிட்டவர் அவ ரல்லர். இதனைத் திருவள்ளுவர் காலத்திலேயே புலவர் பெருமக்கள் பறைசாற்றித் தெரிவித்து விட்டனர்:

"வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்குங்
தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால்-தெள்ளமுதம்
உண்டறிவார் தேவர் உலகு அடைய உண்ணுமால்
வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து."

என ஆலங்குடி வங்கனார் அப்போதே அறிவித்துப் போந்தார். 'உலகு அடைய-உலகம் முழுவதும்-உண்ணும்' என அப்போதே குறி (ஆருடம்) சொல்லிவிட்டுப் போனார். எதிர்காலத்துக்கும் இடம் வைத்து, 'உண்ணும்' என்று 'செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றில் கூறிப் போந்தமையின் நுணுக்கத்தினை நுனித்து நோக்கி மகிழ்க.

வள்ளுவர் உலகங் கொள்ள மொழிந்தார் குறள்”

என நரி வெரூஉத் தலையாரும் கூறியுள்ளார்.

ஆம், உலகினர் உட்கொளகின்றனர்; ஆனால் தமிழர்களின் நிலை என்ன? "வள்ளுவன் குறளை வையகமெல்லாம் வாரியிறையடா தமிழா" என்று பாடுகிறோம், ஆடுகிறோம்; ஆனால் செய்தோமா? செய்கின்றோமா? போகட்டும், இனியேனும் செய்வோமா?