பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

ஆழ்கடலில்


இந்தக் குறளில் மொழியழகு ஒன்று பொதிந்து கிடக் கிறது. 'மறைப்பின் நடுங்கு அஞர் செய்யல மன்' என்பது குறள் பகுதி. 'புருவங்கள் கண்களை மறைத்திருந்தால் அவை துன்பம் செய்திருக்கமாட்டா' என்ற கருத்தை 'மறைப்பின் நடுங்கு அஞர் செய்யல' என்ற பகுதியும், 'மறைக்காததனாலேயே இவ்வாறு என்னைத் துன்புறுத்துகின்றன' என்ற கருத்தை 'மன்' என்னும் ஒரே சொல்லும் அறிவிப்பதை நுனித்துணர்ந்து மகிழ்க. 'மறைக்காததால் துன்புறுத்துகின்றன' என்ற கருத்து. குறளில் வெளிப்படையாய்ச் சொல்லாதொழிந்த கருத்து. இந்த ஒழிந்த (விட்ட) கருத்தை 'மன்' என்பது இசைத்துக் கொடுப்பதால், இதற்கு 'ஒழியிசைப்பொருள்' என்று இலக்கணத்தில் பெயராம். இரண்டெழுத்தில் இத்துணைப் பெரிய பொருள் பொதிந்து கிடக்கிற மொழியழகுதான் என்னே! என்னே! இது விளங்காமல் இக்குறளைக் கற்று என்ன பயன்?

ஊசி முனையில் நிற்பதே கடினம். கூத்தாடுவதோ அதனினும் அருமை! இந்த அருஞ்செயலைத்தானே இந்தக் குறளில் வள்ளுவர் செய்திருக்கின்றார்! இப்படி ஒரு கருத்தைக் கற்பனை பண்ணுவ தென்பது கிள்ளுகீரையா?


பொருட்பால்
அரசியல் - இறைமாட்சி
வல்லது அரசு

(தெளிவுரை) செல்வம் வருதற்குரிய வழிதுறைகளைத் திட்டமிட்டுச் செய்து. நிரம்பச் சேர்த்து, சிதறாமல்