பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வான் சிறப்பு
நெடுங்கடலும்
நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றுந் தடிந்தெழிலி
தானல்கா தாகி விடின்.

(விளக்கம்) கடல் நீர், கதிரவன் வெப்பத்தால் குறைந்து ஆவியாக மாறுகின்றது. அந்நீராவியின் தொகுப்பே மேகம் எனப்படுவது. அம்மேகத்தில் குளிர்ந்த காற்றுப்பட்டால் மழைபெய்யும். மழை கடலிலும் பெய்யும். தரையில் பெய்யப் பட்ட தண்ணீரும் ஆற்றின் வழியாகக் கடலையடையும். இச்செய்தி இங்கு நினைவில் இருக்கவேண்டும்.

(ப-ரை) எழிலி-மேகமானது, தான் -- தான், தடிந்து -- (கடல்நீரைக்) குறைத்து, நல்காதாகிவிடின் --( திரும்பவும் அத்தண்ணிரைப் பெய்து கடலுக்குக்) கொடுக்காவிட்டால், நெடும் கடலும் -- மிகப் பெரிய கடலும், தன்நீர்மை -- தன் இயற்கை வளம். குன்றும் -- குறைந்துவிடும்.

(தெ-ரை) மலையனைய அரசச் செல்வமும் புதிய வருவாயில்லாது போயின் பொலிவு குன்றும். இருக்கும் செல்வத்துள் ஒரளவைச் செலவிட்டுப் புதிய வருவாயைத் தேடினாலேயே புதியதொரு பொலிவு பெறும். அது போலவே, கடல்நீரும் நீராவியாக மாறிப் பின்பு மழை நீரால் நிறைக்கப்படாவிடின் இயற்கைவளம் குன்றும்.

கடல், நீராவியாக மாறிக் குறைவதும், பின்பு மழையால் நிறைவதும், இன்றல்ல -- பல நூற்றாண்டுகட்கு முன்பே தமிழன் அறிந்த செய்தி. இங்கு, “கடல் குறைபடுத்த நீர் கல்குறைபட எறிந்து" என்னும் பழைய பரிபாடல் அடி ஒப்பு நோக்குதற் குரியது. மேலும், நீராவியால் கடல் குறையும்போது, ஆற்றின் வழியாகப் புதுநீர் புகுந்து