பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

ஆழ்கடலில்


ஒட்டு வேலையுந்தான் செய்துள்ளனர். முதலில் வெட்டவில்லை என்றால் பிறகு ஒட்ட வேண்டியதில்லை. இந்த 'ஆல்' என்பதை வள்ளுவர் அந்த ஒட்டுச் சொல்லாக அமைத்துள்ளார் என்பதைச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி (Lexicon) தொகுத்தவர்களும் உணராமல் 'அசை' என எழுதிவைத்துள்ளனர். இவற்றை யெல்லாம் சொல்லப் போனால், பரிமேலழகருக்குமேல் உரையெழுதத் தெரிந்தவன் யாரடா என்று மீசையை முறுக்குகிறார்கள். நான் என்ன செய்வேன்! வள்ளுவர் இந்த அரிய சொல்லாட்சியை இன்னும் பல குறள்களில் அமைத்து வைத்திருப்பதை ஆங்காங்கே காணலாம்.

'இவ்வளவு நன்மையிருந்தும் ஏனையா ஒருவன் செய்யக் கூடாது?' என்று உலக வழக்கில் வியந்து வினவுவதுபோல் 'என் ஒருவன் கல்லாதவாறு' என்று ஆசிரியர் வினவுகிறார் -- வியக்கிறார்! மேலும் சாகும்வரை படிக்கவேண்டும் என்கிறார். இப்போது நம் நாட்டில் நூற்றுக்கு முப்பது -- நாற்பது பேர் படித்திருப்பதாகக் கணக்கெடுத்திருக்கிறார்களல்லவா? இந்தக் குறைந்த அளவுங்கூட, கையெழுத்துப் போட்டால் ஓர் எழுத்துக் குறைப்பவர்கள் உட்பட (கையெழுத்துக்கே இந்தக்கதி என்றால் ...), பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைக்காரர்கள் உட்பட, ஏன் - மாமியார் வீட்டில் அஞ்சல் கடிதத்தைப் படிக்க நேர்ந்த போது நான் இளமையில் அட்டையில் பார்த்ததற்கு இதில் எழுத்துகள் அநியாயமாய் இளைத்து விட்டனவே என்று 'ஓ'வெனக் கதறி ஒப்பாரி வைத்தழுத மாப்பிள்ளை 'மக்குச் சாம்பிராணி' உட்பட எடுத்த கணக்காகத்தான் இருக்கக் கூடும். இதுவா படிப்பு? மாணவர்களே பள்ளிப்படிப்பை முடித்ததும் நூல்களை ஏறக்கட்டி விடுவீர்களோ? அது கூடாது. எந்தத் தொழில் செய்யினும் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் படிப்பீராக! என்கிறார், ஏன்? கற்றது