பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அறத்துப்பால்
தெய்வத்துள் வைக்கப்படும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்


(பதவுரை) வையத்துள் = மண்ணுலகத்திலே, வாழ்வாங்கு வாழ்பவன் = (இல்லறத்தில் இருந்து) வாழவேண்டிய முறைப்படி வாழ்ந்து வருபவன், வான் உறையும் = விண்ணுலகத்தில் அமர்ந்திருக்கின்ற, தெய்வத்துள் வைக்கப்படும் = தெய்வங்களுள் ஒருவனாக வைத்து மதிக்கப்பெறுவான். (வையம் = மண்ணுலகு; வான் = மேலுலகு)

(மணக்குடவர் உரை) இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப் படுவன்.

(பரிமேலழகர் உரை) இல்லறத்தோடு கூடி வாழுமியல்பினால் வையத்தின்கண் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும்.

(விளக்கவுரை) இந்தக் குறளில் உலக வழக்கில் உள்ள உண்மை யொன்று பொதிந்து கிடப்பதாகப் புலப்படுகின்றது. உலகில் ஒழுங்கான முறையில் நல்வாழ்வு நடத்திப் பின்னர் இறந்து போனவரைக் குறித்துச் சுட்டி, "அவர் செத்துத் தெய்வமாகப் போய் விட்டார்" என்று மக்கள் பேசிக் கொள்வதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். நீங்களும் கேட்டிருப்பீர்கள் என்றுதான் நம்புகிறேன். நாமே பலரைப் பற்றி அவ்வாறு சொல்லியிருப்போம். ஆனால், தீய செயல்கள் செய்து இறந்துபோன கொடியவர்களை அவ்வாறு குறிப்பிட்டுச் சொல்வது வழக்கத்திலில்லை; அவர்கள் அலகை