பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

179


இவற்றோடு இக்குறளையும் இயைக்கலாமா? மேலும், 'அறம் செய்வதால் சிறப்பும் நன்மையும் உண்டு' என்பதை வலியுறுத்துவது இவ்வதிகாரம் என்பதும் நினைவில் இருக்க வேண்டும்.

நீத்தார் பெருமை


பெரியர் - சிறியர்


செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

(ப-ரை) செயற்கு -(எல்லோராலும்) செய்வதற்கு, அரிய - அருமையான (முடியாத) செயல்களை, செய்வார்.-- செய்யவல்லவர்களே, பெரியார்-பெரியார் ஆவார்கள். செயற்கு அரிய செய்வதற்கு அருமையான செயல்களை , செய்கலாதார் - செய்யும் வல்லமை யில்லாதவர்கள், சிறியர் -- சிறியவர் ஆவார்கள்.

(தெ-ரை) செயற்கரிய செயல்களாவன :- ஒழுக்கத்து நீத்தல், இருமைவகை தெரிந்து ஈண்டறம் பூணுதல், உரன் என்னும் தோட்டியால் ஓரைந்தும் காத்தல், ஐந்தின்வகை தெரிதல், குணமென்னும் குன்றேறி நிற்றல், எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுதல் முதலியனவாம்.

இக்குறளில், செயற்கரிய செய்வார் பெரியர் என்ற மாத்திரையானே, செய்யாதவர் சிறியர் என்பது தானே பெறப்படுமே! அப்படியிருக்க மீண்டும் ஒருமுறை திருவள்ளுவர் கூறியிருப்பது 'கூறியது கூறல்' என்னும் குற்றத்தின்பாற் படாதோ எனின் படாது;