பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

ஆழ்கடலில்


{விளக்கவுரை) மனைமாட்சி மனைவிக்கு இருக்கத்தானே வேண்டும். அதனால் தானே அவளுக்கு மனைவி என்னும் பெயரும் கொடுக்கப்பட்டது. மனைக்கு உரியவள் மனைவி. வள்ளுவரோ 'இல்லாள்' என்று அழைக்கிறார். இல் என்றால் வீடு. இல்லுக்குரியவள் - வீட்டுக்குரியவள் இல்லாள். இந்தச் சொல்லோடு தொடர்புடைய நயமான செய்தியொன்று நினைவிற்கு வருகிறது. தமிழினம் மனைவிக்குக் கொடுத்திருக்கும் மதிப்புக்கு, மனைவி, இல்லாள் என்னும் சொற்களே சான்று பகருமே! மேலும், ஆடவர் தம் மனைவியரை 'எங்கள் வீட்டிலே' என்னுஞ் சொல்லால் குறிப்பிடுவது மரபு, ஆண்மகன் தான் சிறுவனாய் இருக்கிற போது 'எங்கள் வீட்டிலே கேட்டார்கள்' எனத் தன் பெற்றோரை 'வீட்டிலே' என்னுஞ் சொல்லால் குறிப்பிடுகிறான். அவனே தனக்குத் திருமணமாகிவிட்ட பின்பு, தன் பெற்றோர் இருக்கும்போதே. 'எங்கள் வீட்டிலே கேட்டார்கள்' எனத் தன் மனைவியை 'வீட்டிலே' என்னும் சொல்லால் குறிப்பிடுகிறான். என்ன விந்தை இது! வீட்டிலே என்றால் உன் தந்தையார் வாங்கி வரச் சொன்னார் போலும் என்பார் நண்பர், இல்லை யையா, எங்கள் வீட்டிலே என்கிறேன். -- நீ என்னவோ தந்தையாரா என்று கேட்கிறாயே என்பார் இவர், உடனே நண்பர், ஓகோ! உன் தாயார் வாங்கிவரச் சொன்னாரா? சரிதான், அப்படிச் சொல்லு என்பார். அதற்கு இவர், இல்லையையா இல்லை. எங்கள் வீட்டிலே வீட்டிலே என்று அடித்துக் கொள்கிறேன், மறுபடியும் தாயாரா என்று கேட்கிறாயே, வீட்டிலே என்றால் வேறு யாரையா? என் மனைவிதான் வாங்கிவரச் சொன்னாள் என்பார். உடனே நண்பர். ஓ அப்படியா! தாய் தந்தையரைவிட மனைவி இருந்தால்தான் உனக்கு வீடு வீடாகத் தெரியும்