பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

109


யைக் குறிப்பிடவில்லை , ஒருவன், தன் மனைவிக்கு, நல்நோக்கும் நாணமுமாகிய நகைகளுக்குப் பதிலாக, தன் சொந்தப் பணத்தில் தானே வாங்கிப்போட்டுள்ள சொந்த நகையைத்தான் இரவல் நகை என்று சொல்கிறேன் நான். இல்லையில்லை; மன்னிக்கவும், இவ்வாறு நான் சொல்ல வில்லை; வள்ளுவர் தான் சொல்லியிருக்கிறார் "அணி எவனோ ஏதில என்று! இங்கே 'ஏதில என்றால் அயலானவை - இரவலானவை என்று பொருளாம். ஏதிலான் என்றால் அயலான் - ஏதில என்றால் அயலானவை, எனவே மடநோக்ககும் நாணமுமே சொந்த நகைகள், தலைமகளுக்கு அவைகளே போதும், என்கிறான் தலைமகன்.

மேலும், 'அணி எவனோ?' என்று அங்கலாய்க்கிறான் தலைமகன். எவன் என்றால் ஏன்-- எதற்கு என்று பொருள். மேலும் 'ஓ' சேர்த்து எவனோ - எதற்கோ என்று வன்மையாகக் கண்டிக்கிறான். அவன் மற்ற அணிகலன்களைப் பொருட்படுத்தவில்லை, புறக்கணிக்கிறான் என்பதை 'ஏதில தந்து' என்னும் "ஏனோ தானோ தொடர் அறிவிக்கின்றது. அதாவது வேண்டாத வேற்றுப் பொருளை வலியக் கொண்டு வந்து புகுத்துகிறார்கள் என்ற கருத்தைத்தான் 'ஏதில தந்து' என்பது அறிவிக்கின்றது.

அணிகலன் அணிவது - அழகு தருவதற்காக! இவளுக்கோ அது இயற்கையிலேயே இருக்கிறது. அங்ஙனமிருக்க, அணிகலன் அணிவிக்கும் காரணம் என்ன? எங்களிடம் இவ்வளவு செல்வம் இருக்கிறது என்பதை வெளியில் காட்டும் தற்பெருமை விளம்பரமா இது? அல்லது, இந்த நடிகையும் இதைத்தான் பயன்படுத்துகிறாள் என்று நடிகையின் படத்துடன் ஆடம்பரப் பொருளை அறிமுகப் படுத்தி அவள் மூலம் அப்பொருளுக்குப் பெருமை தேடுகின்ற வாணிக விளம்பரம் போல. தலைமகளுக்கு அணிவதன் மூலம் இந்த நகைகளுக்கு அழகு தேடவேண்டும் என்ற