பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

ஆழ்கடலில்


சொன்னேன். கண்ணாடி போட்டும் இரவிலே ஒன்றும் தெரியவில்லை என்று சொன்னேன் அந்த இரவு பகலற்ற தத்துவ ஞானிகளிடம். நீண்ட நேரம் எழுதினாலோ படித்தாலோ நெரிந்து நீர் கசிவதாகச் சொன்னேன் என் புண்ணைப் பற்றி - இல்லையில்லை என் கண்ணைப் பற்றி. இத்தகைய புண்ணுக்கண்ணை அவர்கள் இழந்துவிட்டார்களே யொழிய, அவர்கள் அங்கே எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டிருப்பதால், அவர்கள் கல்வியென்னும் உண்மையான கண்ணைப் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டேன். 'கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்' என்னும் இந்தக் குறளையும் எடுத்துக் கூறி விளக்கினேன். இப்போது நீங்களே சொல்லுங்கள்! கண்ணிழந்தும் கல்வி கற்றுள்ள அவர்கள் குருடர்களா? அல்லது, கண்ணிருந்தும் கல்வி கற்காத வெறுஞ் சோற்றுத் துருத்திகள் குருடர்களா? எனவே, இப்பொழுது புரிகிறதா இந்தக் குறளின் உட்கிடை? இதை விளக்கவே இவ்வளவு சொன்னேன். என்னைப் பற்றி எழுதியதற்காகப் பொறுத் தருள்க!

அப்படியே கல்லாதவருக்கும் சுண்ணிருப்பதாக வைத்துக் கொண்டாலும், இந்தப் புண்ணுக்கண் (ஊனக்கண்), வெளிச்சத்தில் உள்ள பொருளை மட்டும் ஒரு குறிப்பிட்ட தொலைவுக்குள் உள்ள பொருளை மட்டுமே காண முடிகின்றது; ஆனால் கல்விக்கண்ணோ (ஞானக்கண்ணோ ) ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருள்களையும் நிகழ்ச்சிகளையும் காண்கின்றது - ஆயிரமாயிரம் கல் தொலைவிற்கு அப்பாலுள்ள பொருள்களையும் நிகழ்ச்சிகளையும் காண்கின்றது. அதனாலேயே "கண்ணுடையர் என்பவர் கற்றோர்" என்றார் ஆசிரியர், கல்வியைக் கண் என்று சொல்லிவிட்டதால், எழுதப் படிக்கத் தெரிந்தவரெல்லோரும் கொக்கோகங்களையும்