பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

ஆழ்கடலில்


மண், நீர், தீ, காற்று, விண் என்னும் ஐந்தால் ஆனதே உலகம், ஐம்பூதம் என்பன இவையே. உடம்பும் இவ்வைம் பூதங்களின் திரிவே. இவ்வைந்தும் உடம்பிலும் உள்ளன, உடம்பிற்குள் வெளி இடங்கள் (துவாரங்கள்) இருப்பதால் விண் உள்ளது எனவும், மூச்சுவிடுவதால் காற்று உள்ளது எனவும், எவ்வளவு உண்டாலும் எரித்து விடுவதாலும் - ஈரத்துணி காய்ந்து விடுவதாலும் நெருப்பு உள்ளது எனவும், உணவுப் பொருள்களை அரைத்துக் கொடுப்பதற்கு வாயிலிருந்து நீர் ஊறுவதால் தண்ணீர் உள்ளது எனவும், மயிர், நகம் முதலியன வெட்ட வெட்டத் தோன்றி முளைப்பதால் மண் உள்ளது எனவும் உணரலாம். மற்றும், வாய் நீரின் உதவியால் உணவுச் சுவையைப் பெறுகின்றது; கண் நெருப்பின் (விளக்கு, கதிரோன், நிலா) உதவியால் ஒளி பெறுகின்றது: மெய் காற்றின் உதவியால் ஊற்றின்பம் (ஊறு) பெறுகின்றது; செவி விண்ணின் உதவியால் ஓசை பெறுகின்றது (வானொலி); மூக்கு மண் உதவியால் நாற்றம் (வாசனை) பெறுகின்றது (வானுலக மலருக்கு வாசனையில்லை யென்று புராணங்கள் புளுகுவதின் பொருத்தமும் இது தான் போலும்). இவையெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் அறிந்த செய்தியே! எனவே, வெட்டுவதற்குக் கையும் வாளும் கருவியாக இருப்பதைப்போல, சுவை முதலிய ஐவகை இன்பங்களையும் அடைவதற்கு. மெய், வாய் முதலிய ஐம்பொறிகளும், மண், நீர் முதலிய ஐம்பூதங்களும் உதவியாக இருக்கின்றன. இவற்றின் உதவியால் ஐவகை இன்பங்களை அளவாக அடைந்து. உயிரை உடம்பிலே நெடுநாள் நிலைக்கவைத்துச் சிறந்த செயல் பல செய்ய மிகமிகக் கடமைப்பட்டுள்ளான் மனிதன். நிலைமை இப்படியிருக்க, ஐவகை இன்பமும் உயிர் வாழ்வதற்காகவே என்றெண்ணாமல், இன்பத்திற்காகவே உயிர் வாழ்வது என்றெண்ணி அளவுமீறி உண்டு உடல்