பக்கம்:1806 (ந. சஞ்சீவி).pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

1806



கூட்டத்திற்கும் இடையே நடந்த வீரப்போராட்டத்தில் எண்ணூற்றுவருக்கு மேற்பட்ட இந்தியச்சிப்பாய்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். வேலூரிலும் சுற்றுப்புறங்களிலும் சுதந்தரவீரர்கள் வேட்டையாடப்பட்ட சில நாட்களில் இரண்டாயிரத்து இருநூற்று இருபத்திருவருக்கு மேற்பட்ட சிப்பாய்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளினின்றும் கைது செய்யப்பட்டார்கள். இச்சந்தர்ப்பத்தில் வேலூரிலும், திருச்சியிலும் ஒரே சமயத்தில் அறுநூற்றுவருக்கு மேற்பட்ட புரட்சி வீரர் சிறையிடப் பட்டனர். புரட்சித் தீயில் வெந்து மடிந்த வெள்ளையர்கள் நூற்றுக்கணக்கானவர்கள்.

தோல்வி ஏன் ? வேலூர்க் கோட்டை இறுதியில் இவ்வளவு எளிதில் பிடிபட்டதற்குப் பல பொதுக் காரணங்களும், சிறப்புக் காரணங்களும் உண்டு என்பது ஆராய்ச்சியால் புலனாகிறது. வேலூர்ப் புரட்சிக்குப் பின்னே அமைந்து கிடந்த திட்டம் மிகப்பெரியது; மெய் சிலிர்க்கச் செய்வது ! புரட்சி நடந்த காலத்தில் இராணுவப் பெருந்தலைவனாய் இருந்த சர்ஜான் இராடக்கு என்பவனே இவ்வுண்மையை ஒளியாது உரைத்துள்ளான்; இணை காண முடியாத இரகசியத்துடனும் எச்சரிக்கையுடனும் வேலூர்ப்புரட்சி மிக விரிவாகத் திட்டமிடப்பட்டிருந்தது. புரட்சியின் குறிக்கோள் ஒவ்வொரு வெள்ளையனையும் கொன்று தீர்த்துவிட்டுத் திப்புவின் திருமகனை அரியணையில் அமரச் செய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:1806_(ந._சஞ்சீவி).pdf/28&oldid=1138817" இலிருந்து மீள்விக்கப்பட்டது