பக்கம்:அங்கும் இங்கும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

தங்கியிருக்கக் கண்டோம். இது, நாடு முழுவதற்குமான, மாணவர் இல்லம். ஆகவே பல இராச்சியங்களிலிருந்தும் இங்கு வந்து தங்குகிறார்கள். பதினைந்து நாள்களுக்கு மட்டுமே இங்குத் தங்கலாம். ஆண்டு முழுவதும் இல்லம் திறந்திருக்கும். ஆண்டு முழுவதும், இல்லம், விடு முறையின்றி நிறைந்திருக்கும்.

மாணவர் இங்கு வருவது தங்கள் விருப்பப்படியல்ல. பள்ளிப் படிப்பிலோ, விளையாட்டிலோ சிறப்பிடம் பெறும் மாணவ, மாணவியரே இங்கு வரலாம். அந்நிலை பெற்றவர்களுக்கு, முறைப்படி இடம் கிடைக்கும். எந்த மாதத்தில் என்று சொல்லமுடியாது. விடுமுறைக் காலத்தில் இல்லாமல் பள்ளிக்கூட காலத்திலும் முறை வரலாம்.

“பள்ளிக்கூட காலத்தில் பதினைத்து நாள் அங்கு வந்து விடுவதால் படிப்புக் கெட்டுப் போகாதா?” இக்கேள்வியைக் கேட்டோம்.

அங்குள்ள முழு உயர்நிலைப்பள்ளியைக் காட்டினர். எல்லா வசதிகளும் உள்ள பள்ளி அது. போதிய ஆசிரியர்களும் கருவிகளும் உள்ள பள்ளி அது. பாடம் நடந்துகொண்டிருக்கும் பள்ளி அது. சிறப்பிடம் பெறாதவர்களுக்கு அங்குத் தங்க வாய்ப்பு இல்லையா ? உண்டு நூற்றுக்கு இருபது இடத்தை அப்படிப்பட்டவர்களுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். இதில் வருகிறவர்கள் செலவிற்குப் பணம் கொடுக்க வேண்டும். சிறப்பிடம் பெற்றவர்களுக்கு இலவசத் தங்கல், உணவு.

கடற்கரைக்குச் சென்றோம். மாணவ. மாணவியர் பலர் நீந்தக் கற்றுக்கொண்டிருந்தார்கள். அதற்கென்று நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் உடன் இருந்து கற்றுக் கொடுத்தார்கள். அங்கு ஆழமும் இல்லை; அலையும் இல்லை. அரை கிலோ மீட்டர் துரங்கூட அப்படியே இருக்குமாம். ஆகவே, மூழ்கிப் போவோமோ என்ற அச்சமின்றி மகிழ்ச்சியோடு அவர்கள் நீந்தப் பழகிக் கொண்டிருந்தனர்.