பக்கம்:அங்கும் இங்கும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

எதிர்காலத்தின் நன்மைக்காக, இளைஞர்களை இப்படிக்காத்து ஆகவேண்டும். மேலும் மேலும் கற்க வைத்தாக வேண்டும் என்று லெனின் கண்டிப்பாக இருந்தார்.

"கற்பதே, மேலும் மேலும் கற்பதே. மாணவர்கள் ஆற்ற வேண்டிய நாட்டுத் தொண்டு ; புரட்சிப் பணி' என்று லெனின் அறவுரையும் அறிவுரையும் கூறியதோடு நில்லாமல், தாமும் தம் கட்சியும் அன்றும் பின்னும் அக் கொள்கையை வழுவாமல் காத் திராவிட்டால், சோவியத்தின் ஒன்றியத்தின் அறிவியல். பொறி இயல், தொழில் இயல் வெற்றிகளை-இந்த அளவிற்குப் பெற்றிருக்க முடியாது. தலைவர் லெனினது நல்லுரைகளில், இவ்வுரையே. அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் இளைஞர்களுக்குத் தேவையானது. ஆகவே இதை லெனினது படத்தின் கீழ் எழுதி வைத்திருக்கிறோம்.’’ இப்படி எங்களுக்கு விளக்கிக் கூறினார்கள்.

"அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன், என்பதைப்போல் இப்போதைக்கு-சமதர்ம ஆட்சிக் காலத்திற்கானதை அப்போதே-ஜார் ஆட்சிக் காலத்தின்போதே அறிவுறுத்தி, விதை நெல்களான மாணவர்களைக் கட்டிக் காத்ததால் அன்றோ, உலகம் வியக்கத்தக்க, முன்னறியாப் பெரும் செயல்களையெல்லாம் அருஞ் சித்துக்களையெல்லாம் செய்ய முடிகிறது சோவியத் ஒன்றியத்தால். வான வெளியிலே உலகத்தைச் சுற்றிய கருவிகளையும், நிலா உலகிற்குச்சென்று இறங்கிய கருவிகளையும் செய்து தந்த தொழில் மேதைகளும்; வழி வகைகளை வகுத்துத் தந்த விஞ்ஞானிகளும், கணித மேதைகளும் எங்கிருந்தோ குதித்து விட்டார்களா ? நிலம் வெடிக்க மேதைகளாக வெளி வந்தவர்களா ? லெனின் காலத்து மானவர்கள் அல்லவா படித்துப் படித்து, மேலும் மேலும் படித்து, உலகத் தலைமை நிலையை எட்டிப் பிடித்து விட்டார்கள். வளர வேண்டிய நாமும், நம் மாணவர்களை மாணவர்களாக வளரும்படி பார்த்துக் கொள்ளவேண்டாமா ?