பக்கம்:அணியும் மணியும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

எனக் கூறி மறுக்கும் கண்ணகியின் செயலையும் அடுத்தடுத்து அமைத்து முரணால் சிறப்புப் பெற வைக்கின்றார்.

அவலத்தின் எல்லையாகக் கோவலனின் கொடிய முடிவைச் சொல்லுமிடத்து, அவள் அவனோடுவாழ்ந்த காலத்துக் கொண்ட உவகைக் காட்சிகளை உடன் வைத்துக் காட்டி அவலத்தின் நிலையை மிகுதிப்படுத்தி இறுவேறு உணர்வுகளை மோதவைத்துச் சுவையை மிகுவிக்கின்றார். அவலத்தோடு உவகையை ஒருங்கு வைத்துக் காட்டுவதோடு வேறு வகையாகவும் இறுவேறு காட்சிகளை அமைத்து அவள் கொண்ட துன்பத்தின் துடிப்பையும் துடைக்க முடியாத் துயரத்தையும் காட்டிச் செல்கிறார். கண்ணகி அலையுண்ட மனத்தோடு கோவலன் கொலையுண்ட இடந்தேடிக் கவலையோடு செல்கிறாள். கம்பலை மாக்கள் கண்ணீர் சிந்தும் அவள்முன் வந்து அவனைக் காட்ட, அவள் மட்டும் அவனைக் காண முடிந்தது; அவன் அவளைக் காணவில்லை என்று இரண்டு வேறுபட்ட நிலைகளைச் சொல்லிச் சோகத்தை மிகுதியாகக் காட்டுகின்றார்.

கண்ணகியின் கண்கள் அவன் மூடிய கண்களைக் காண்கின்றன. காலையிலிருந்து மாலைவரை நடந்த செய்திகளைச் சொல்ல வேண்டிய அவன் கண்கள், திறந்தும் பாராமல் மூடிக்கிடந்தன. காதற்கதை பேசிய அக்கண்கள் துன்பக் கதைகளைக் கண்மூடிய வண்ணம் சொல்லிக் கொண்டிருந்தன. காதலால் ஒருமிக்க சந்திக்கும் அக்கண்கள் சாதலால் சந்திப்பை இழந்துவிட்டன என்ற செய்தியை இளங்கோவடிகள் நன்கு காட்டுகின்றார்.

கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்டச்

செம்பொற் கொடியனையாள் கண்டாளைத்தான் காணான்

என்று கண்ணகி அவனைக் கண்டதையும், அவன் அவளைக் காணாததையும் ஒருங்கு வைத்துக் கூறுகின்றார்.