திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/சாமுவேல் - இரண்டாம் நூல்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இலிருந்து
விவிலிய ஓவியம்: தாவீது அரசராக முடிசூட்டப்படுகிறார். ஓவியம் படைக்கப்பட்ட காலம்: 10ஆம் நூற்றாண்டு. நூல்: பாரிசு திருப்பாடல்கள் தொகுப்பு. காப்பிடம்: பாரிசு, பிரான்சு

2 சாமுவேல் (The Second Book of Samuel) [1][தொகு]

முன்னுரை

'1 சாமுவேல்' என்னும் நூலின் தொடர்ச்சியான '2 சாமுவேல்', அரசர் தாவீதின் ஆட்சி வரலாற்றைக் கூறுகிறது. முதல் நான்கு அதிகாரங்கள், தெற்கே யூதாவின் மேல் அவர் ஆட்சி புரிந்ததையும், பின்னைய அதிகாரங்கள், வட பகுதியான இஸ்ரயேல் உட்பட நாடு முழுவதன்மேலும் அவர் ஆட்சி புரிந்ததையும் விரித்துரைக்கின்றன. தாவீது தம் அரசை விரிவுபடுத்தவும், தம் நிலையை உறுதிப்படுத்தவும் நாட்டிலுள்ள எதிரிகளோடும் வேற்றரசுகளோடும் போராடியதை இந்நூல் படம்பிடித்துக் காட்டுகிறது.

தாவீது ஆண்டவரிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்ததோடு, தம் மக்களின் முழு நம்பிக்கையையும் பெற்றிருந்தார். இருப்பினும் சில நேரங்களில் தம் தவறான நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக எந்தப் பாவத்தையும் செய்யத் தயங்காதவராய் இருந்திருக்கிறார். ஆயினும், அவருடைய பாவங்களை இறைவாக்கினர் நாத்தான் அவருக்குச் சுட்டிக்காட்டியபோது, அவர் அவற்றை அறிக்கையிட்டுக் கடவுள் அளித்த தண்டனையை ஏற்றுக்கொள்ளவும் செய்தார்.

தாவீதின் வாழ்க்கையும் அவர்தம் வெற்றிகளும் இஸ்ரயேல் மக்களின் மனத்தில் ஆழமாய்ப் பதிந்துவிட்டன. எனவேதான் பிற்காலத்தில் நாடு தொல்லைக்குட்பட்ட நேரங்களில், அவரைப்போல் தங்களுக்காகப் போராடக்கூடிய 'தாவீதின் மகன்' தங்களுக்கு அரசராய் மீண்டும் வரவேண்டுமென்று அவர்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.

2 சாமுவேல்[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. யூதாவின் மீது தாவீதின் ஆட்சி 1:1 - 4:12 464 - 470
2. அனைத்து இஸ்ரயேல் மீதும் தாவீதின் ஆட்சி

அ) முற்பகுதி
ஆ) தாவீதும் பத்சேபாவும்
இ) துன்பங்களும் தொல்லைகளும்
ஈ) பிற்பகுதி

5:1 - 24:25

5:1 - 10:19
11:1 - 12:25
12:26 - 20:26
21:1 - 24:25

470 - 506

470 - 478
478 - 481
481 - 498
498 - 506

2 சாமுவேல்[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

சவுலின் இறப்பைத் தாவீது அறிவித்தல்[தொகு]


1 சவுல் இறந்தபின், அமலேக்கியரைத் தோற்கடித்துத் திரும்புகையில் தாவீது சிக்லாகில் இரண்டு நாள் தங்கினார்.
2 மூன்றாம் நாள், சவுலின் பாசறையினின்று கிழிந்த ஆடைகளோடும் புழுதிபடிந்த தலையோடும் ஒருவன் வந்தான். அவன் தாவீதிடம் வந்ததும், தரையில் வீழ்ந்து வணங்கினான்.
3 "நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று தாவீது அவனை வினவ, "நான் இஸ்ரயேல் பாசறையினின்று தப்பி வந்துவிட்டேன்" என்று அவன் பதில் கூறினான்.


4 "என்ன நடந்தது? என்னிடம் சொல்" என்று தாவீது கேட்க, அவன், "வீரர்கள் போரினின்று ஓடிவிட்டனர்; அவர்களுள் பலர் வீழ்ந்து மடிந்து விட்டனர்; சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர்" என்று கூறினான்.
5 "சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துவிட்டனர் என்று உனக்கு எப்படி தெரியும்?" என்று தன்னிடம் பேசிக் கொண்டிருந்த இளைஞனிடம் தாவீது கேட்டார்.


6 அதற்கு அந்த இளைஞன், "நான் தற்செயலாகக் கில்போவா மலையில் இருந்தேன். சவுல் தன் ஈட்டியின்மீது சாய்ந்து கொண்டிருந்தார். அப்போது தேர்களும் குதிரை வீரர்களும் அவரை நெருங்கிக் கொண்டிருந்தனர்.
7 அவர் தம் பின்னால் திரும்பிய போது என்னை பார்த்துக் கூப்பிட்டார். 'இதோ இருக்கிறேன்' என்று நான் கூறினேன்.
8 'யார் நீ?' என்று அவர் என்னை வினவ, 'நான் ஓர் அமலேக்கியன்' என்று பதிலளித்தேன்.
9 'என்மீது நின்று, என்னைக் கொல், ஏனெனில் மரணவேதனையில் நான் சிக்கியுள்ளேன். ஆனால் என் உயிர் இன்னும் ஊசலாடிக்கொண்டிருக்கிறது' என்று அவர் என்னிடம் கூறினார்.
10 நான் அவர்மீது நின்று அவரைக் கொன்றேன். ஏனெனில் விழுந்தபின்பு அவர் உயிர் பிழைக்கமாட்டார் என நான் அறிவேன். அவரது தலையில் இருந்த மகுடத்தையும் கையிலிருந்த காப்பையும் எடுத்துக்கொண்டு, என் தலைவராகிய உம்மிடம் வந்துள்ளேன்" என்று கூறினான்.
11 தாவீது தம் ஆடைகளைப் பற்றிக் கிழித்தார். அவரோடு இருந்தவர்களும் அவ்வாறே செய்தனர். [1]
12 சவுலுக்காகவும், அவருடைய மகன் யோனத்தானுக்காகவும் ஆண்டவரின் மக்களுக்காகவும் இஸ்ரயேல் வீட்டாருக்காகவும் அவர்கள் அழுது புலம்பி மாலை வரை நோன்பு இருந்தார்கள். ஏனெனில் அவர்கள் வாளால் மடிந்துவிட்டார்கள்.


13 தாவீது தமக்குச் செய்தி கொண்டுவந்த இளைஞனிடம், "நீ எங்கிருந்து வருகிறாய்?" என்று மீண்டும் வினவ, "நான் ஒரு வேற்றினத்தான், அமலேக்கியன்" என்று மறுமொழி கூறினான்.
14 "ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரைக் கையோங்கிக் கொலை செய்ய நீ அஞ்சாதது ஏன்?" என்று தாவீது அவனைக் கேட்டார்.
15 பின்பு தாவீது இளைஞன் ஒருவனைக் கூப்பிட்டு, "போ, அவனை வெட்டு" என்றார். அந்த இளைஞன் அவனை வெட்டி வீழ்த்த, அவன் இறந்தான்.
16 "உன் இரத்தம் உன் தலைமேல் இருக்கட்டும். ஏனெனில் 'ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவரை நான் கொன்றேன்' என்று உன் வாயே உனக்கு எதிராகச் சான்று சொல்லிவிட்டது" என்று தாவீது அவனை நோக்கிக் கூறினார்.

சவுல், யோனத்தான் ஆகியோருக்காக தாவீதின் துயரம்[தொகு]


17 பிறகு தாவீது சவுலையும் அவருடைய மகள் யோனத்தானையும் குறித்து இரங்கற்பா ஒன்று பாடினார்.
18 யூதாவின் மக்களுக்கும் இது கற்பிக்கப்பட வேண்டும் என்று யாசாரின் நூலில் எழுதப்பட்டுள்ள 'வில்லின் பாடல்': [2]


19 "இஸ்ரயேலே! உனது மாட்சி உன் மலைகளிலே மாண்டு கிடக்கின்றது!
மாவீரர் எவ்வாறு மடிந்தனர்!
20 காத்தில் இதைச் சொல்ல வேண்டாம்; அஸ்கலோன் வீதிகளில் இதை அறிவிக்க வேண்டாம்;
ஏனெனில், பெலிஸ்தியரின் புதல்வியர் அகமகிழக்கூடாது; விருத்தசேதனமற்றோரின் புதல்வியர் ஆர்ப்பரிக்கக்கூடாது.
21 கில்போவா மலைகளே! பனியோ மழையோ உம்மீது பொழியாதிருப்பதாக!
வயல்கள் முதற்கனிகளைத் தராதிருப்பனவாக!
ஏனெனில் வீரர்களின் கேடயங்கள் தீட்டுப்பட்டனவே!
சவுலின் கேடயமும் எண்ணெயால் மெருகு பெறாதே!
22 வீழ்த்தப்பட்டோரின் இரத்தத்தினின்றும் வீரர்களின் கொழுப்பினின்றும் யோனத்தானின் அம்பு பின்வாங்கியது இல்லை!
சவுலின் வாள் வெறுமையாய்த் திரும்பியதும் இல்லை!
23 சவுல்! யோனத்தான்! அன்புடையார், அருளுடையார்!
வாழ்விலும் சாவிலும் இணைபிரியார்!
கழுகினும் அவர்கள் விரைந்து செல்வர்! அரியினும் அவர்கள் வலிமைமிக்கோர்!
24 இஸ்ரயேல் புதல்வியரே! சவுலுக்காக அழுங்கள்!
செந்நிற மென்துகிலால் உங்களை உடுத்தியவர் அவரே!
பொன்னின் நகைகளினால் உம் உடைகளை ஒளிரச் செய்தாரே!
25 போர் முனையில் வீரர் எங்ஙனம் வீழ்ந்துபட்டனர்!
உன் மலைகளிலே யோனத்தான் மாண்டு கிடக்கின்றான்!
26 சகோதரன் யோனத்தான்! உனக்காக என் உளம் உடைந்து போனது!
எனக்கு உவகை அளித்தவன் நீ! என் மீது நீ பொழிந்த பேரன்பை என்னென்பேன்!
அது மகளிரின் காதலையும் மிஞ்சியது அன்றோ!
27 மாவீரர் எவ்வாறு மடிந்தனர்! போர்க்கலன்கள் எங்ஙனம் அழித்தன!" 13.

குறிப்புகள்

[1] 1:6-10 = 1 சாமு 31:1-6; 1 குறி 10:1-6.
[2] 1:18 = யோசு 10:13.

அதிகாரம் 2[தொகு]

தாவீது யூதாவின் அரசராதல்[தொகு]


1 இதன்பின் தாவீது, "நான் யூதாவின் நகர்களில் ஏதேனும் ஒன்றிற்குச் செல்லட்டுமா?" என்று ஆண்டவரிடம் கேட்டார். "செல்" என்றார் ஆண்டவர். "எங்கு செல்லலாம்?" என்று மீண்டும் தாவீது வினவ, "எபிரோன்" என்று ஆண்டவர் பதிலளித்தார்.


2 ஆகவே தாவீது தம் இரு மனைவியரான இஸ்ரயேலைச் சார்ந்த அகினோவாமுடனும், கர்மேலைச் சார்ந்த நாபாலின் கைம்பெண்ணான அபிகாயிலுடனும் அங்கு சென்றார். [1]
3 தம்மோடு இருந்த ஆள்களையும் அவர்களின் குடும்பத்தினரோடு, தாவீது அங்கே கூட்டி வந்தார். அவர்கள் எபிரோன் நகர்களில் குடியேறினர்.
4 யூதாவின் மக்கள் வந்து, தங்கள் குலத்தின் அரசராகத் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர். "யாபோசு-கிலயாதின் ஆள்கள்தான் சவுலை அடக்கம் செய்தார்கள்" என்று அவர்கள் தாவீதிடம் கூறினர். [2]


5 யாபேசு-கிலயாதின் ஆள்களுக்குத் தாவீது தூதுனுப்பி, "நீங்கள் உங்கள் தலைவர் சவுல்மீது அன்புகாட்டி அவரை அடக்கம் செய்தீர்கள். ஆண்டவரின் ஆசி பெறுவீர்களாக!
6 ஆண்டவர் உங்களுக்கு நிலையான அன்பும் உண்மையும் காட்டுவாராக! நீங்கள் இவ்வாறு செய்ததால் நானும் உங்களுக்கு நன்மை செய்வேன்!
7 வலிமை பெற்று வீரர்களாகத் திகழுங்கள்! உங்கள் தலைவர் சவுல் இறந்துவிட்டார்; எனினும் யூதா குலத்தார் தங்கள் அரசனாக என்னைத் திருப்பொழிவு செய்துள்ளனர்" என்று கூறினார்.

இஸ்பொசேத்தை இஸ்ரயேலின் அரசராய் ஏற்படுத்தல்[தொகு]


8 இதற்கிடையில் சவுலின் படைத்தலைவனாகிய நேரின் மகன் அப்னேர் சவுலின் மகன் இஸ்பொசேத்தை மகனயிமுக்கு அழைத்துச் சென்று
9 கிலயாது, அசூரி, இஸ்ரியேல், எப்ராயிம், பென்யமின் மேலும் அனைத்து இஸ்ரயேல் மேலும் அவனை அரசனாக்கினான்.
10 சவுலின் மகன் இஸ்பொசேத்து இஸ்ரயேல்மீது அரசாளத் தொடங்கியபோது அவனுக்கு வயது நாற்பது. இரண்டு ஆண்டுகள் அவன் அரசனாக இருந்தான். ஆனால் யூதா குலமோ தாவீதைப் பின்பற்றியது.
11 தாவீது எபிரோனில் யூதா குலத்தின் மீது ஆட்சி புரிந்த காலம் ஏழு ஆண்டுகளும் ஆறு மாதங்களுமே.

யூதா, இஸ்ரயேலிடையே போர்[தொகு]


12 நேரின் மகன் அப்னேரும் சவுலின் மகன் இஸ்பொசேத்தின் பணியாளர்களும் மகனயிமிலிருந்து புறப்பட்டுக் கிபயோனுக்குச் சென்றனர்.
13 செரூயாவின் மகன் யோவாபும் தாவீதின் பணியாளர்களும் புறப்பட்டுச் சென்று அவர்களைக் கிபயோன் குளத்தருகே எதிர் கொண்டனர். ஒரு சாரார் இப்பக்கமும் மறுசாரார் அப்பக்கமும் குளத்தின் அருகே அமர்ந்தனர்.
14 "இளைஞர்கள் எழுந்து நமக்கு முன்பு வாள்போர் செய்யட்டும்" என்று அப்னேர் யோவாபிடம் கூறினான். "அவர்கள் அவ்வாறே செய்யட்டும்" என்று யோவாபும் கூறினான்.
15 பென்யமின் மற்றும் சவுலின் மகன் இஸ்பொசேத்து சார்பில் பன்னிருவரும், தாவீதின் பணியாளருள் பன்னிருவரும் எழுந்து வந்தனர்.
16 ஒவ்வொருவனும் தன் எதிரியின் தலையைப் பிடித்துக் கொண்டு அவனது விலாவில் வாளை ஊடுருவினான். இருவரும் ஒன்றாக மடிந்தனர். அந்த இடத்தை எல்காத் அட்சூரிம் [3] என்று அழைத்தனர்.
17 போர் அன்று மிகக் கடுமையாக உருவெடுத்தது. அப்னேரும் இஸ்ரயேல் ஆள்களும் தாவீதின் பணியாளர்கள் முன் முறியடிக்கப்பட்டனர்.
18 அங்கே செரூயாவின் புதல்வர் - யோவாபு, அபிசாய், அசாவேல் ஆகிய மூவரும் இருந்தனர். அசாவேல் காட்டு மான்போல் வேகமாக ஓடக் கூடியவன்.
19 அசாவேல் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலமோ, இடமோ விலகாமல் துரத்தினான்.


20 அப்னேர் பின்னால் திரும்பி, "அசாவேல் நீயா?" என்று கேட்டான். "நானே தான்" என்று அவன் பதில் கூறினான்.
21 "உன் வலமோ இடமோ விலகி இளைஞருள் ஒருவனைப் பிடித்து, அவன் உடைமைகளைப் பிடுங்கிக் கொள் "என்று அப்னேர் அசாவேலிடம் கூறினான். ஆனால் அசாவேலுக்கு அவனைப் பின்தொடர்வதிலிருந்து விலகிவிட மனம் இல்லை.


22 "என்னை பின்தொடர்வதிலிருந்து விலகி விடு. நான் ஏன் உன்னைக் குத்தி வீழ்த்த வேண்டும்? உன் சகோதரன் யோவாபுக்கு நான் எவ்வாறு என் முகத்தைக் காட்டுவேன்?" என்று மீண்டும் அப்னேர் அசாவேலிடம் கூறினான்.
23 ஆனால் அசாவேல் அதைக் கேளாமல் தொடர்ந்தான். ஆகவே அப்னேர் தன் ஈட்டி முனையால் அவனை வயிற்றில் குத்த, அது அவனைப் பின்னாக ஊடுருவியது. அந்த இடத்திலே அவன் விழுந்து இறந்தான். அசாவேல் விழுந்து இறந்த இடத்திற்கு வந்த அனைவரும் நிலைகுலைந்து நின்றனர்.


24 பின் யோவாபும் அபிசாயும் அப்னேரைப் பின் தொடர்ந்தனர். கிபயோன் பாலைநிலப் பாதையில் கீகுக்கு முன்பாக இருக்கும் அம்மா மலையை அவர்கள் வந்தடைந்த போது கதிரவன் மறைந்துகொண்டிருந்தான்.
25 அப்போது பென்யமினின் ஆள்கள் அப்னேருக்கு பின் ஒரே படையாகத் திரண்டு ஒரு குன்றின் உச்சியில் நின்றனர்.
26 அப்னேர் யோவாபைக் கூப்பிட்டு, "வாளுக்கு இரை கொடுக்க வேண்டுமா? முடிவு கசப்பாக இருக்கும் என நீ அறியாயோ? தங்கள் சகோதரர்களைப் பின்தொடராமல் திரும்பிச் செல்லுமாறு மக்களிடம் நீ சொல்ல மாட்டாயோ?" என்று கூறினான்.


27 அதற்கு யோவாபு "வாழும் கடவுள் மேல் ஆணை! நீ பேசாதிருந்தால், காலையிலேயே தங்கள் சகோதரர்களைப் பின்தொடராமல் மக்கள் விலகியிருப்பார்கள்" என்று கூறி,
28 எக்காளம் ஊதினான். அனைத்து மக்களும் நின்றனர். அதற்குமேல் அவர்கள் இஸ்ரயேலைப் பின்தொடரவில்லை. போரிடவுமில்லை.


29 அப்னேரும் அவனுடைய ஆள்களும் இரவு முழுவதும் பயணம் செய்து அராபா வழியாக யோர்தானைக் கடந்தனர். தொடர்ந்து பிக்ரோன் முழுவதும் பயணம் செய்து மகனயிமை அடைந்தனர்.
30 யோவாபு அப்னேரைப் பின்தொடர்வதினின்று திரும்பியபின், தன் ஆள்கள் அனைவரையும் ஒன்று திரட்டினான். அசாவேல் நீங்கலாக, தாவீதின் பணியாளருள் பத்தொன்பது பேரைக் காணவில்லை.
31 தாவீதின் பணியாளர்களோ அப்னேரின் ஆள்களான முந்நூற்று அறுபது பென்யமினியரைக் கொன்றிருந்தனர்.
32 அவர்கள் அசாவேலின் சடலத்தைத் தூக்கி வந்து பெத்லகேமிலிருந்த அவனுடைய தந்தையின் கல்லறையில் அடக்கம் செய்தார்கள். யோவாபும் அவனுடைய ஆள்களும் இரவு முழுவதும் பயணம் செய்து, பொழுது புலர்ந்ததும் எபிரோனை அடைந்தனர்.

குறிப்புகள்

[1] 2:2 = 1 சாமு 25:42-43.
[2] 2:4 = 1 சாமு 31:11-13.
[3] 2:16 'வாள்களின் வயல்கள்' என்பது பொருள்.


(தொடர்ச்சி): சாமுவேல் - இரண்டாம் நூல்:அதிகாரங்கள் 3 முதல் 4 வரை