பக்கம்:அணியும் மணியும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

நீதிநெறி நூலாகவோ, பொருளைப் பொருட்படுத்தும் பொருளியல் நூலாகவோ, இன்பத்தை வகைப்படுத்தும் இன்பவியல் நூலாகவோ, தருக்க வாதங்கள் மிக்க தத்துவ நூலாகவோ அமைந்திருக்குமேயன்றி, உலகம் போற்றும் உயர்ந்த இலக்கியங்களுள் ஒன்றாக விளங்கியிருக்காது.

வள்ளுவர் வாய்ச்சொல்லின் திறத்தைத் திறம்பட அறிவதால், அச்சொல்லின் நலமும், அச் சொல்நலத்தால் சிறப்புறும் பாநலமும் அறிய முடிகின்றன. திறன் மிக்க சொற்களுக்கு ஆற்றலும், அவ்வாற்றலால் அறச்செயலும், அறச்செயலால் பொருளும் மிகும் என்பது அவர்தம் கருத்தாகும்.

திறனறிந்து சொல்லுக சொல்லை; அறனும்
பொருளூம் அதனினூஉங் கில் – 644

என்பது அவர் குறளாம். திறனறிந்து எதையுஞ்சொல்ல வேண்டும் என்பதை வற்புறுத்தும் அவர், திறம் தெரிந்து சொல்லைப் பயன்படுத்தித் தம் பாநலத்தை மிகுவித்திருப்பதற்கு. அவர்தம் திருக்குறட்பாக்கள் தக்க சான்றாகும்.

திறனறிந்து சொல்லப்பெறும் சொற்களும், அவற்றால் உணர்த்தப்பெறும் கருத்துக்களும் கேட்டாரைப் பிணித்துக் கேளாரையும் ஈர்க்கும் இயல்பைப் பெற்று விளங்கும் இயல்பினவாம்.

கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல் - 643

என்பது அவர் தரும் விளக்கமாகும். பிறர் விரும்புமாறு, அவர் உள்ளத்தைக் கவரக்கூடிய சொற்களால், சொல்லுவனவற்றை ஒழுங்குபடுத்திச் சொல்ல வேண்டும் என்பது அவர்தம் அறிவுரையாகும்.