பக்கம்:அணியும் மணியும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார் – 104

என்பதில், தினையையும் பனையையும் ஒரே இடத்தில் காட்டி அமைக்கின்றார்.

இவ்வாறு சுருங்கச்சொல்லி விளங்கவைத்தல் என்ற பண்பு அடிப்படையாக அமைந்திருப்பதால்தான். திருக்குறள் சொற்றிறனில் மிக்கது என்று கூறலாம். ஒலியிலும், எடுத்தாளும் சொல்லிலும், இசைந்து அசைத்துச் சீராக அமைக்கும் சீரிலும், சீர்பெற்று நடக்கும் அடிகளிலும், அழகுபட அமைக்கும் அணியிலும் சுருக்கத்தை ஆண்டு, பொருள் நிறைவை உணர்த்தும் பெருமை திருக்குறள் ஒன்றிற்கே உண்டு என்று கூறலாம். 'சில சொல்லல்' என்ற அழகு அவர் சொற்றிறன் என்பதும், அதுவே அவர் கூறும் பொருட்டிறனை இலக்கிய வளமுடையதாகச் செய்கிறது என்பதும் தெளிவாகின்றன.