பக்கம்:அமிர்தம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பேச்சுக்கே அத்தம்பதிகளிடையே சந்தர்ப்பம் எழவும் இல்லை. ஒருவேளை தன் அத்தான் என்றாகிலும் வீணையை மீட்டி வாசிக்கும்படி கேட்க நேர்ந்தால் என்ன ஆகும் என்றுமட்டும் மனத்தில் பலமுறை சம்சயப்பட்டதுண்டு. பொங்கிக் குமுறும் துக்கத்தை மாற்றிவிட வகை என்ன என்பதாக ஆராய்ந்தும் இருக்கிறாள் வாஸந்தி. அவ்வளவு பாசம் தமக்கைமீது. ஆனால் வாஸந்தியின் பயம் முடிவில் நிஜமாக நிகழத்தான் செய்தது. ஒரு நாள் வீணையை ஒரே ஒருமுறை வாசிக்கவேண்டுமென்று விண்ணப்பித்துக் கொண்டான் மூர்த்தி.

விழிக்கோடியில் உருப்பெற்றுக்கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு, நெற்றியில் விழுந்து புரண்டு. விளையாடும் கேசத்தை ஒதுக்கிக்கொண்டு மெல்ல எழுந்தாள் வாஸந்தி. பார்வையில் ஏக்கம் வலைபின்ன, தலையை நிமிர்த்தி சுவரில் மாட்டியிருந்த சுலோவின் போட்டோவை ஒரு கணம் நோக்கியபின் வீணை சகிதம் கீழே அமர்ந்தாள். எதிரேயிருந்த நாற்காலியில் மூர்த்தி வீற்றிருந்தான். இறந்துபோன சுலோவே உயிர் பெற்று வந்து கானமிழைக்கப் போவதாக மூர்த்திக்கு எண்ணம் ஓடியது. உடம்பு புல்லரித்தது. வாஸந்தி முகத்தில் புன்னகையை வருவித்துக்கொண்டாள்!

“ஆரம்பிக்கிறாயா வாஸ்த்தி?”

“ஆகட்டும்” என்பதற்கு அடையாளமாக வீணையின் கம்பிகளை நெருடிவிட்டாள். விரல்கள் தந்திகளில் இழைய, கானம் காற்றில் மிதந்தது.

தந்தியில் எழுவது நாதம்
சிந்தையில் எழுவதுகாதல்...

தளிர் விரல்கள் வர்த்தியத்துடன் விளையாடத் துவங்கின. தொடர்ந்து வாசித்துக்கொண்டேபோனாள். மூர்த்தி தன்னை மறந்து, சூழ்நிலையையும் மறந்த கான லயத்தில் ஒன்றிப்போய் ரசித்த வண்ணமிருந்தான்.

81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/83&oldid=1322890" இலிருந்து மீள்விக்கப்பட்டது