பக்கம்:கடல் கடந்த நட்பு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
27

பயங்கரமாகத் தோன்றும். இந்தப் பெரிய வீட்டிலே இன்னும் பெரிய படங்கள் இருக்குமா? அங்கே ரேடியோ வைத்திருப்பார்களா? அந்த அம்மாள் ஆங்கிலம் பேசுவாளா?

வெய்யிற்காலத்திலே தோட்டக்காரன் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதிலேயே பெரும்பகுதியான காலத்தைக் கழித்தான். பள்ளியிலிருந்து திரும்பிய பிறகு ஜூடி அவனுக்கு உதவி செய்ய விரும்பவில்லை. குளித்துவிட்டு, மின்சார விசிறிக்கடியிலே அமர்ந்து எலுமிச்சம்பழ ரசங்கலந்த பானத்தைத் தம்ளர் தம்ளராகக் குடிக்கவே அவள் விரும்பினாள். தோட்டக்காரன் கருஞ்சிவப்பு ஷேரான் ரோஜாச் செடிகளை ஒரு கும்பலாக வளர்த்திருந்தான். அவற்றைப்பற்றி அவனுக்கு மிகவும் பெருமை. லண்டனில் வளர்வதைப்போலவே சென்னையிலும் ஷேரான் ரோஜா நன்றாக வளர்வது வேடிக்கையாக இருப்பதாக ஜூடி நினைத்தாள். ஷேரான் ரோஜா ரொம்ப அழகு. ஆனால் ஒருவெள்ளாடு உள்ளே நுழைந்து அவற்றைக் கடிக்கத் தொடங்கிற்று. தோட்டக்காரனும் பணியாளும் உரக்கக் கத்திக் கொண்டு ஆட்டை நோக்கிப் பாய்ந்து அதை விரட்டியடித்தார்கள். பயந்துபோன ஆடு முட்டி மோதிக் காக்காப்பூக்கொடி படர்ந்திருந்த வேலியிலே ஒரு சந்து உண்டாக்கி விட்டது. “அந்த சந்தை அடைக்க எத்தனை நாளாகுமோ?” என்று ஜூடியின் தாய் சற்று வருத்தத்தோடு கூறினாள்: வெய்யிற்காலத்திலே யாரும் அதிகமாக வேலை செய்ய விரும்புவதில்லை. அப்பொழுது ஆங்கிலேயர்களைப் போலவே இந்தியரும் கஷ்டப்பட்டார்கள். அவர்களுக்கு மின்சார விசிறிகளோ, குளிரூட்டும் பெட்டிகளோ, அவைபோன்ற சாதனங்களோ மிக மிகக் குறைவாகத்தான் உண்டு.