பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரி

17

நெல்லைக் கொண்டு சோறு சமைத்து அதையும் உண்டார்கள் பாரியின் வீரர்கள்.

பல காலம் முற்றுகையிட்டிருந்தாலும் உணவுக் குறைவு மேலே இருப்பவர்களுக்கு நேராது என்பதை மன்னர்கள் அறிந்து, தம் படைகளை மீட்டுக்கொண்டு தம் ஊரை அடைந்தார்கள். அவர்களுக்கு மனத்துக்குள் கோபம் மூண்டாலும் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டார்கள். போன பிறகும் பாரியைத் தொலைக்க வஞ்சகமாக ஏதாவது வழி உண்டா என்று ஆராய்ந்தார்கள்.

பாரியிடம் புலவரும் பாணரும் விறலியரும் தடையின்றிப் பரிசு பெற்றுச் செல்வதைத் தமிழுலகம் நன்கு அறிந்திருந்தது. முடி மன்னர் மூவரும் அறிந்திருந்தார்கள். அதனால், யாழ் வாசிக்கத் தெரிந்த சிலரை அழைத்துத் தம் கருத்தை முடிக்கும் படி ஏவினார்கள். அவ் வஞ்சப் பாணர்கள் பாரியிடம் சென்று யாழிசையாலும் பாட்டாலும் அவன் அன்பைப் பெற்றனர். ஒரு நாள் மலைவளம் காணவேண்டும் என்று அவனுடன் சென்றனர். கபிலர் அப்போது வெளியூர் சென்றிருந்தார்.

பறம்பு மலையின்மேல் மரங்கள் அடர்ந்த சூழலில் அந்த வஞ்சகர்களுடன் பாரி நடந்து சென்றான். அப்போது அந்தக் கொடுஞ் செயலாளரில் ஒருவன் பாரியை வாளால் துணித்து வீழ்த்திவிட்டான். பின்பு அந்த வஞ்சகர்கள் தம் வேடத்தை மாற்றி ஓடி விட்டார்கள்.

பொய்யாது பெய்த மேகம் வறண்டது. புலவர்களுக்கு வற்றாது நல்கிய அருவி வற்றியது. பறம்பு நாடு மட்டுமா கண்ணீர் வடித்தது? தமிழ்நாடு முழுவ