பக்கம்:எழு பெரு வள்ளல்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஓரி

51

ஊதினான். மற்றவர்கள் வேறு கருவிகளை வாசித்தார்கள். எல்லோருக்கும் தலைவனாக நின்று பாணன் பாடினன்; ஓரியின் பெயர் வரும் பாடலை இன்னிசையுடன் பாடினான். தன் பெயராதலால் அதைக் கேட்டு ஒரி நாணினான். "நாங்கள் எவ்வளவோ நாடுகளையெல்லாம் பார்த்துக்கொண்டு வருகிறோம். உன்னைப் போலத் திறமையையுடைய வேட்டுவன் எங்கும் இல்லை" என்று புகழ்ந்தான் பாணன். அதிகமாகப் புகழ இடம் கொடுக்காமல், தான் வேட்டையாடிய விலங்கின் ஊனைத் தந்து நிறையத் தேனையும் வழங்கினான் ஓரி. அவனே ஓரி யென்பதை அறிந்து கொண்டான் பாணன். அந்தப் பாணன் நிகழ்ந்ததையெல்லாம் சொல்வது போலப் பாடலை அமைத்திருந்தார் வன்பரணர்.

ஓரியினிடம் வரும் இசைவாணர்கள் அவன் உள்ளத்தைத் தம் இசையால் கொள்ளை கொண்டனர். அவர்களுக்கு யானைகளைப் பரிசிலாகக் கொடுத்தான். வெள்ளி நாரிலே நீல மணியினால் செய்த குவளை மலர்களைத் தொடுத்து அவர்களுக்கு வழங்கினான். பொற் பூ முதலிய பிற அணிகலன்களையும் அளித்தான்.

இசைப் புலவர்கள் அவனை நாடி வந்தால், "நீங்கள் பாடுங்கள்" என்று அவன் சொல்வதில்லை. அவர்களுக்கு அறுசுவை உண்டியை வயிறு நிரம்ப அளிப்பான். உறங்க மெத்தென்ற படுக்கையைக் கொடுப்பான். யாதொரு குறையுமின்றி அரசகுமாரர்களைப் போல அவர்கள் இன்பம் துய்ப்பார்கள். அவர்களாக மகிழ்ந்து பாடினால் அதைக் கேட்டு மகிழ்வான். "குயிலைப் பாடு என்று சொல்லிக் கேட்க முடியுமா? இளவேனில் வந்தால் மாஞ்சோலையில் அது மாந்