பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

திருக்கோபுரம்

ரின் சிறப்பை ஒரு சொல்லிலே சொல்லிவிட்டு அங்குள்ள கோயிலைப் பற்றிச் சொல்ல வருகிறார். கோயிலுக்கு அடையாளம் எது? நெடுந்துாரத்திலே இருந்து பார்த்தாலும் இங்கே ஆலயம் இருக்கிறதென்று காட்டுவது கோபுரம். அதை ஸ்தூல லிங்கம் என்று சொல்வார்கள். லட்சுமீகரம் பொருந்திய ஊர் என்று காட்டுவதற்குக் கோபுரத்தைக் கட்டினார்கள். "கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்பது அந்தக் காலத்திய உபதேச மொழி.


   "மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்”
அழகு என்று இலக்கண நூல் சொல்லுகிறது.கோபுரம் இறைவன் திருக்கோயில்களின் புறச்சின்னம்.

ஆனால் இன்றைக்கு மனிதன் வசிக்கும் மாளிகைக்குக் கோபுரம் வைக்கிறார்கள். சாமிக்குக் கோபுரம் போய் விட்டது; ஆசாமிக்கு வந்துவிட்டது.

ஒர் ஊரிலேயுள்ள கோயிலுக்குக் கோபுரம் கட்டுவது அந்த ஊரில் லட்சுமீகரம் இருக்கிறதென்பதைக் காட்டும் அடையாளம். அந்த ஊர் மக்களுடைய உழைப்பு இறைவனைச் சார்ந்து பயன் பெற்றது என்பதைக் கோயில் காட்டுகிறது.

இப்போது மக்களுடைய சொந்தத் தேவைகள் மிக அதிகமாகப் போய்க் கொண்டிருக்கின்றன. மக்களுக்கு வேண்டிய பலபல பொருள்களை உற்பத்தி செய்யக் கூடிய தொழில்களும், தொழிற்சாலைகளும் வளர்ந்துகொண்டே போகின்றன. முன்பெல்லாம் மக்களுடைய தேவை மிகக் குறைவு. ஆனால் அவர்களுடைய பலம் இப்போது இருப்பவர்களுடைய பலத்தைப் போல் பத்து மடங்கு, இருபது மடங்கு அதிகமாக இருந்தது. எல்லோரும் சுறுசுறுப்பாய் இருந்தார்கள். அவர்களுடைய சக்தி எல்லாம் என்ன ஆயின? அவை வீணாகவில்லை. அவை ஒன்றாகச் சேர்ந்தமையால் பெரிய பெரிய ஆலயங்கள் வானளாவ எழுந்தன. அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு சாகவில்லை. யாவரும் கூட்டாக வேலை செய்து இறைவனுக்குரிய கோயில்களையும், கோபுரங்களையும் எழுப்பினார்கள்.

38