பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருணகிரியார் செய்த அலங்காரம்


நிலையிலிருந்து அன்பு நிலையிலே வாழ்ந்து, அன்பிலேயிருந்து அருள் நிலைக்கு உயர்ந்தவர்.

நாம் எல்லோரும் இருள் உலகத்தில் கிடக்கிறோம். அவா நம்மைப் பற்றியிருப்பதால் துன்பங்களும் பற்றியிருக்கின்றன. துன்பத்தை நீக்க வேண்டுமானால் ஆசையை அறுக்க வேண்டும்.
   "ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
    ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்;
    ஆசைப் படப்பட ஆய்வருந் துன்பம்
    ஆசை விடவிட ஆனந்த மாமே"
என்றார் திருமூலர்.

ஒருவனுக்கு ஒரு வீசை ஆசை நீங்கிற்று என்றால் அவனுக்கு ஒரு வீசைத் துக்கம் இல்லை. ஒரு மணு நீங்கிற்று என்றால் அவனுக்கு ஒரு மணுத் துக்கம் இல்லை. ஒருவனுக்கு எந்த அளவுக்கு ஆசை நீங்குகிறதோ அந்த அளவுக்குத் துக்கம் இல்லை.
   "யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்"
என்கிறார் திருவள்ளுவர். ஆசை அதிகப்படத் துன்பமும் அதிக மாகும். பிறவித் துன்பத்திற்கு மூலம் ஆசைதான்.
   "அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றும்
    தவாஅப் பிறப்பினும் வித்து"
என்பது திருக்குறள். அந்த ஆசை வித்தைப் பற்றாக்கி, பற்று நிலை மாறி அன்பைப் பெற்று, அதைப் பெருக்கினால் அருள் ஆகிவிடும்.

அருணகிரிநாதர் இந்த நிலையில் இருந்து உலகத்திலே மக்கள் எல்லாம் படுகின்ற இன்பதுன்பத்தைக் கண்டு, துன்பம் மிகுதியாக இருப்பதையும் பார்த்து, அந்தத் துன்பங்களை எல்லாம் தாமே படுவதாக நினைத்து, அவற்றிற்குக் காரணமான பாவச் செய்கைகளைத் தம்மேலேயே ஏறிட்டுக்கொண்டு பேசினார். இந்தப் பெருங்கருணையை அவரிடத்தில் பார்த்த பெரியோர்கள், 'கருணைக்கு அருணகிரி' என்று சொன்னார்கள்.

19