பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருணகிரியார் செய்த அலங்காரம்

பழக்கினால் மனம் அமைதி பெறும். அந்தத் தியானத்துக்காகவே இறைவனுடைய உருவங்கள் இருக்கின்றன.

மனத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். நல்ல மனம் ஒரு பகுதி. நடுநிலைமையாக இருப்பது அது. அதுவே சத்துவ குணமணம். ரஜோ குணமனம், தாமச குணமனம் என்று வேறு இரண்டு பகுதிகள் உண்டு. சத்துவம் ராஜசம், தாமசம் என்ற மூன்று குணங்களும் சேர்ந்து மனம் அமைந்திருக்கிறது. இந்த மூன்று குணங்களும் கலந்து நின்றே நாம் நினைக்கிறோம். நமது மனத்திலே சத்துவகுணம் அதிகமாக மற்றவை தாழ்ந்து விடும். கடைசியில் சத்துவ குணமும் அடங்கி மனம் இயக்கமின்றி ஒழியும்.

சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும்போது, அதனை எரிப்பவன் என்ன செய்கிறான்? பெரிய மூங்கில் கழி ஒன்றை எடுத்துக் கொண்டு பிணத்தைப் புரட்டி நெருப்பிலே தள்ளிச் சாம்பலாக்கும் படி பொசுக்குகிறான். பிணம் பொசுங்கிய பிறகு அந்த மூங்கில் கழியையும் நெருப்பிலேயே போட்டுக் கொளுத்தி விடுகிறான். பிணத்தை எரிப்பதற்கு உதவிய அந்த மூங்கில் கழி கடைசியில் அந்த அக்கினியில் தன்னையும் எரித்துக் கொள்கிறது. இதைப் போன்றதுதான் சத்துவகுண மனமும். சத்துவகுணத்தைக் கொண்டு ராஜச தாமச குணங்களை முதலில் இருந்த இடம் தெரியாமல் பொசுக்க வேண்டும். சத்துவகுணம் மிகுதி ஆக ஆக மற்ற மனங்கள் எல்லாம் மறைந்து விடும். கடைசியில் சத்துவகுண மனமும் ஞானாக்கினியால் நீறாகி விடும்.

தியானம் செய்வதனால் சத்துவகுண மனத்தின் ஆற்றல் மிகுதியாகிறது. இறைவன் திருவுருவத்தை மனத்தில் நிறுத்திப் பழகுவதே தியானம். பழக்கம் இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. நாம் இப்போது கண்ணை மூடிக் கொண்டால் இருட்டுத்தான் தெரிகிறது. நமக்குப் பிரியமானவர்களை நினைத்தாலும் அவர்கள் உருவம் தெளிவாகத் தெரிகிறதில்லை. ஆனால் கனவிலே தோன்றும் உருவங்கள் தெளிவாகத் தெரிகின்றன. இந்த மனந்தான் அப்போதும் அந்த உருவங்களைக் காண்கின்றது. இப்போது கண்ணை மூடிக் கொண்டால் தெளிவாகத் தோன்றாமல் அப்போது மாத்திரம் ஏன் தெளிவாகத் தெரிகிறது? இப்போது நாம் ஜாக்கிரத்தில் இருக்கிறோம். கண்ணை மூடிக்

க.சொ.1-3

25