பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஐந்து பகைவர்

சிவபெருமான் திரிபுரம் எரித்த கதையையும் ஷண்முகநாதப் பெருமான் சூர சங்காரம் செய்த கதையையும் மூன்றாவது பாட்டில் சொன்னார் அருணகிரி நாதர். தேவலோகவாசிகள் சூரபன்மனது ஆதிக்கத்திற்கு உட்பட்டு, தங்கள் அரசையும் இழந்து, அடிமை வாழ்வில் அகப்பட்டு உழன்று கொண்டிருந்தார்கள். சூரனை வென்று முருகன் அவர்களுக்கு சுயராஜ்யம் வாங்கித் தந்தார் என்று பார்த்தோம்.

அடுத்தபடியாக அருணகிரி நாதருக்கு ஒரு நினைவு வந்தது. 'தேவலோகத்தைக் கைப்பற்றிக் கொண்டு தேவலோக வாசிகளை அடிமைப்படுத்திய அசுரர்களைச் சங்காரம் செய்து, ஆண்டவன் தேவர்களுக்குத்தானே பிழைப்புக் கொடுத்தான்? அதனாலே நமக்கு என்ன?' என்ற நினைவு யாருக்காவது வந்தால் என்ன செய்வது என்று எண்ணினார் போலும்: "நமக்குத் தேவலோகம் போன்ற ராஜ்யம் எதுவும் சொந்தமாக இல்லை. ஒரு ஜமீன்கூடச் சொந்தம் இல்லை. நமக்கு என்று ஒரு தனி ராஜ்யம் இருந்து, அது போய்விட்டால் மீட்டும் அதனை முருகன் வாங்கித் தருவான். ஒரு வீடுகூடச் சொந்தம் இல்லாமல் இருக்கிற நமக்கு அவனைப் பற்றி என்ன கவலை?" என்று ஒருவர் கேட்பதாக வைத்துக் கொள்வோம். அதற்குரிய விடையைப் புலப்படுத்தும் பாடலை அடுத்தபடி அலங்காரத்தில் பார்க்கிறோம்.

இதற்கு முன்னாலே, சொன்ன பாட்டில், 'சூர்ப்பேரணி கெட்டது" என்றுதான் சொன்னார்; சூரன் அழிந்ததைக் குறிப்பாகப் பெற வைத்தார். இந்தப் பாட்டில் இவனை முருகன் சங்காரம் செய்தான் என்பதையும் வெளிப்படையாகச் சொல்கிறார்.