பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

பெறும்போது உண்டாகும் வேதனையைப் பொறுக்க முடியாத தாய், இனித் தன் மணாளனோடு இன்புறக் கூடாது என்று தீர்மானம் செய்து கொள்கிறாள். ஆனால் குழந்தையின் முகத்தைப் பார்த்தவுடன் அந்த வேதனை மறந்து போய்விடுகிறது.

இன்னும் ஒரு வைராக்கியம் உண்டு. அது நாயின் வாழ்க்கை யோடு சம்பந்தம் உடையது. நாய், "இனிமேல் நாம் எச்சில் இலையைத் தொடவே கூடாது" என்று முடிவு செய்து கொண்டு குப்பை மேட்டில் படுத்திருக்குமாம். சொத் என்று எங்கேனும் எச்சில் இலை விழுகிற ஒலி காதில் பட்டால் இந்த எண்ணத்தை மறந்து உடம்பை உதறிக் கொண்டு புறப்பட்டுவிடுமாம். இதைச் சுவான வைராக்கியம் என்று சொல்வது வழக்கம். ஒரு கணத்துக்கு நிற்கிற வைராக்கியங்கள் இவை.

அசுர இயல்பு

மனிதனிடம் இருக்கும் இந்த இயல்பு அசுரர்களிடமும் இருக்கிறது. அப்படிச் சொல்வதைவிட அசுரர்களிடம் உள்ள நிலையற்ற தெளிவு மனிதனிடம் இருக்கிறது என்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதனிடமும் அசுர இயல்பும் தேவ இயல்பும் கலந்தே இருக்கின்றன. அசுர இயல்புகளைக் கொஞ்சங் கொஞ்சமாகப் போக்கிக் கொண்டு வந்தால் நன்மை உண்டாகும்.

முருகன் அழுகையொலி கேட்டுப் புலம்பிய அசுரர்கள் அன்றோடு அந்த அச்சத்தை மறந்து போனார்கள். மறுபடியும் எச்சரிக்கை செய்வதுபோல முருகன் கிங்கிணியொலியை எழுப்பினான். அப்போதைக்கு அவர்கள் அஞ்சினார்கள். அவ்வளவுதான்.

தேவர் மகிழ்ச்சி

இறைவனுடைய கிங்கிணி ஓசையைக் கேட்டு அஞ்சினவர்களும் நடுங்கினவர்களும் இருக்கட்டும். யாரேனும் அதைக் கேட்டு மகிழ்ந்தார்களா? அசுரர்களுடைய அச்சத்தில் மகிழ்ச்சியும் முருகனுடைய அவதாரத்தில் தைரியமும் அடைபவர்கள் தேவர்கள். அவர்கள், "நம்மைக் காப்பாற்ற வந்த பெருமான் குழந்தைத் திருவிளையாடல்களைச் செய்து கொண்டு வளர்கிறான்" என்று எண்ணி மகிழும்படி அந்தக் கிங்கிணியோசை செய்தது. இந்தச்

35O