பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

தமிழர்கள் அமைத்து வழிபட்டார்கள். மலையும் மலையைச் சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்துக்குத் தெய்வம் முருகன்; புற்பூண்டு ஒன்றும் வளராமல் இருக்கிற பாலை நிலத்துக்குத் தெய்வம் காளி; ஒரே காடாக இருக்கிற முல்லை நிலத்துக்குத் தெய்வம் திருமால்; மக்கள் வேளாண்மை செய்து வாழும் நிலமாகிய மருத நிலத்துக்குத் தெய்வம் இந்திரன்; கடலும் கடலைச் சார்ந்த இடமும் ஆகிய நெய்தல் நிலத்துக்குத் தெய்வம் வருணன்.

குறிஞ்சி

ந்த ஐந்து நிலங்களிலேயும் முதல் நிலம் என்று சொல்வது குறிஞ்சி. முதல் என்பது வரிசையினால் அல்ல; காலத்தினால் முதன்மையானது; பழமையானது. உலகம் தோன்றுவதற்கு முன்னால் எங்கே பார்த்தாலும் தண்ணீர் நிரம்பியிருந்தது. உலகம் தோன்றியபோது முதலில் மலைதான் தன் தலையை நீட்டியது.

"கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடி"

என்று தன் குடியின் பழமையை ஒரு மறவன் பேசுகிறான். கல் தோன்றிய பிறகே மண், ஆறு, ஊர், கடற்கரை யாவும் தோன்றின. முதலில் தோன்றிய மலைக்குத் தெய்வம் முருகன் என்று தமிழர் வைத்தார்கள். அதனால் முருகனை முதல்வனாகவும் மிகப் பழைய தெய்வமாகவும் அவர்கள் கொண்டிருந்தார்கள் என்று தெரியவரும். முருக வழிபாடு பழங்காலந்தொட்டே தமிழ் நாட்டில் இருந்து வருகின்றது.

குறிஞ்சிக் கடவுள்

"சேயோன் மேய மைவரை உலகமும்"

என்று தொல்காப்பியம் சொல்கிறது. சேயோன் என்பதற்குச் சிவந்த நிறம் உடையவன் என்று பொருள். சிவந்த நிறம் உடைய முருகன் மலையையும் மலையைச் சார்ந்த இடத்தையும் விரும்பி, அங்கே தங்கி இருக்கிறான்.

இந்த நாட்டினர் உயர்ந்த கடவுளை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றவேண்டுமென்று எண்ணினார்கள். கொஞ்சம்

162