பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சும்மா இருக்கும் எல்லை

பார்" என்று பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் சொல்கிறாள். ஊரிலிருந்து தலைவன் வந்தவுடன் ஒரு பெரிய சண்டை நடக்கப் போகிறது என்று அந்தத் தோழி நினைக்கிறாள்.

அவன் மறுநாள் வந்துவிட்டான். அவன் வரும் பொழுதே அந்தக் காதலியின் முகத்தில் புன்முறுவல் அரும்பிவிட்டது. எதுவும் பேசாமல் தலைவனுக்குக் காபி போட உள்ளே போய்விட்டாள். பெரிய சண்டை ஆரம்பமாகப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த தோழிக்குப் பெரிய ஏமாற்றம். 'என்ன என்னவோ கேட்கப் போகிறேன்' எனச் சொல்லிய தலைவி எதுவும் பேசாமல் மெளனமாக இருப்பது அவளுக்கு விந்தையாக இருந்தது. அவன் வெளியில் போனவுடன் மெள்ளப் போய்த் தலைவியை, "நீ ஏதோ சண்டைப் போடப் போவதாகச் சொன்னாயே; உன் கணவனிடம் நிறையக் குற்றங்கள் இருப்பதாக அடுக்கினாயே! ஒன்றையும் கேட்காமல் மெளனமாகவே இருந்துவிட்டாயே?" என்று கேட்கிறாள். அவள் தோழிக்கு விடை சொல்கிறாள். திருக்குறளில் அந்த விடை ஒரு பாட்டாக இருக்கிறது.

"எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து."

பெண்கள் மை இட்டுக் கொள்வது வழக்கம். அதற்காக ஒரு கோல் வைத்திருப்பார்கள். அது தந்தத்தினாலோ, தங்கத்தினாலோ அமைந்திருக்கும். தூர இருக்கும்பொழுது அது தந்தமா, தங்கமா என்பது நன்றாகத் தெரிகிறது. ஆனால் மை தீட்டுவதற்கு அதைக் கண் அருகில் கொண்டு போய்விட்டால் அந்தக் கோல் தெரிவதில்லை. அதுபோலக் கணவன் அருகில் இல்லாதபோது அவன் குறைபாடுகள் தெரிந்தன. ஆனால் அருகில் வந்தபோது, "எழுதுங் கால் கோல் காணாக் கண்ணேபோல் அவன் பழியை நான் காண்பதில்லை" என்கிறாள். நாயகன் அருகில் வந்துவிட்டால் பேச்சு அடங்கிவிடுகிறது. எதுவும் சொல்லத் தோன்றுவதில்லை.

இறைவனை உணராத காலத்தில் அவன்பால் பல குறைகளைச் சொல்லத் தோன்றும். "கடவுளுக்குக் கண் இருந்தால் இப்படி நடக்குமா? என் வேண்டுகோளுக்கு அவன் இரங்காமல் இருக்கிறானே" என்றெல்லாம் பலர் பேசக் கேட்கிறோம். அதைக் கேட்டு, அவர்களுக்குக் கடவுளிடத்தில் பக்தி இல்லையோ என்று

301