கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1
எம்பெருமான் வெற்றி கொடியில் வந்த பிற்பாடு அதற்குத் தடையே இல்லை. சூரசங்காரம் ஆன பிறகு அதன் தடை நீங்கிற்று. இன்றைக்குத் தடைகள் பட்டுப் போன, ஒழிந்த, சேவலாகச் சர்வ சுதந்தரத்துடன் எம்பெருமானது வாகைப் பதாகையில் இருந்து கூவுகிறது.
சிறகடிக்கும் சேவல்
சேவல் எழுந்து சிறகை அடித்துக் கொண்டு எழும்புவது பறப்பதற்காக அல்ல. மற்றப் பறவைகள் சிறகை அடிக்கும்போது எழுந்து பறக்கும். ஆனால் சேவலோ சிறகை அடித்துக் கொண்டு கூவும். பொழுது புலர்வதற்கு முன்னாலே கோழி கூவும். கோழி கூவிவிட்டால் நிச்சயம் பொழுது புலர்ந்துவிடும் என்று நமக்குத் தெரியும். அது கூவுவதற்கு முன்னால் சிறகை அடிக்கிறது.
எம்பெருமான் திருக்கரத்திலுள்ள கோழியும் சிறகை அடிக்கிறது. அதனை வருணிக்கிறார். சாதாரணமான கோழி சிறகை அடித்தாலேயே கீழே உள்ள தூசிகள் பறக்கும். எம்பெருமான் திருக்கரத்திலுள்ள கோழி சிறகை அடித்துக் கொள்கிறபோது என்ன ஆகிறது? உலகமே கிடுகிடாய்க்கிறது.
- சலதிகிழிந்து
- உடைபட்டது அண்ட கடாகம்;
- உதிர்ந்தது உடுபடலம்;
- இடைபட்ட குன்றமும் மாமேரு
- வெற்பும் இடிபட்டவே.
இது எந்தப் புராணத்தில் இருக்கிறது? எந்தப் புராணத்திலும் இல்லை. தத்துவப் பொருளை உள் அடக்கிய கற்பனை விரிகிறது அருணகிரியாருக்கு. அந்தத் தத்துவத்தை இனிப் பார்ப்போம்.
வெற்றிக் கொடியிலே நின்று சேவல் சிறகை அடித்துக் கொள்ள, முதலில் என்ன ஆயிற்று? சலதி கிழிந்தது; கடல் கிழிந்து போயிற்றாம். அதற்குப் பிறகு என்ன ஆயிற்று? உடைபட்டது அண்ட கடாகம். பூலோகம் வட்டவடிவமானது எனப் பெரியோர்கள் கற்பனை செய்து சொல்கிறார்கள். கோழி முட்டையைப் போல ஒரு கோளவடிவமாக இருக்கிறது என்பதை வான சாஸ்திரிகளும் சொல்கிறார்கள். சின்னச் சின்ன முட்டை வடிவமான கோளங்
336