பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தனிப்பரமானந்தம்

தினைப்புனம்

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல்
காக்கின்ற பேதைகொங்கை
விரும்புங் குமரனை

வள்ளி வாழ்ந்த புனம் எப்படி இருக்கிறது? பச்சைப் பசேல் என்று தினைப் பயிர் விளைந்த கொல்லை அது. கண்ணுக்கு எட்டும் வரைக்கும் எங்கே பார்த்தாலும் தினைப் பயிர் விளைந்திருக்கிறது. புனம் என்பது தினைப்பயிர் விளையும் நிலம். அங்கே வள்ளியம்மை சிற்றேனல் காக்கிறாள். ஏனல் என்றால் தினை என்று பொருள். சிறிய தினையைக் காக்கின்றாள்.

தானியங்களுள் சிறியது தினை என்றும், பெரியது நெல் என்றும் சொல்வார்கள். தினை விளைகின்ற பூமி புனம். இதனைப் புன்செய் நிலம் என்பர். நெல் விளைகின்ற பூமி நன்செய் நிலம் என்பர். அதிகப் பாடு இல்லாமல் விளைவது தினை. மிக்க உழைப்பினால் விளைவது நெல். ஏழைகள், பண வசதி அற்றவர்கள் தினையை உண்பார்கள். தஞ்சாவூர் மிராசுதார்கள் நெல் உணவு உண்ணுவார்கள். உழைப்பு அதிகமாகக் கொள்ளும் நெல்லுக்கு நிச்சயமாக அதிக உயர்வு இருக்கும். புன்செய்க்கு அத்தனை உழைப்பில்லை. உழைப்பு இல்லாததால் புன்செய்ப் பயிர்கள் உயர்வு பெறாமல் இருக்கின்றன. உயர்வு பெறாமல் உள்ள சிறிய தினைப் பயிரை வள்ளியம்மை காத்துக் கொண்டிருக்கிறாள். அவள் எத்தகையவள்? பேதை; அறியாமையை உடையவள். அந்தப் பெரிய காட்டில் மிகச் சிறியதான தினையைக் காக்கிறாள். சிற்றேனல் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் உணவு ஆதலாலே, அதனைக் கிளி, குருவி முதலியவை கொத்திக் கொண்டு போகாமல் இருக்க ஆலோலம் பாடி அவற்றைத் துரத்திக் கொல்லையைக் காவல் செய்து வருகிறாள். அப்படிக் காப்பாற்றுவதையே தன் வாழ்க்கைச் செயல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

திருமணம் புரிந்து கொண்டு நாயகன் வீடு போகிற வரைக்கும் குற மகளிர்களுடைய வேலை தினைப் புனம் காவல் புரிவது. அந்த வகையில் குறமகளாகிய வள்ளியெம்பெருமாட்டி சிற்றேனலைக் காத்துக் கொண்டிருக்கிறாள். இதன் உள்ளுறை என்ன? மனித

195