பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முகவுரை

அருணகிரிநாதர் முருகன் அருளில் மூழ்கித் திளைத்தவர். அதுமாத்திரம் அன்று. சிறந்த புலமை உடையவர். அவருடைய திருவாக்கைக் கூர்ந்து ஆராய்ந்தால் தென்மொழியிலும் வட மொழியிலும் ஒருங்கே புலமை பெற்றவர் என்பதை உணரலாம். பழங்காலத்தில் அராகம், வண்ணம், வகுப்பு, முடுகு என்ற பெயரோடு அங்கங்கே சந்த அமைப்பையுடைய கவிகள் இருந்தாலும் முழுவதும் சந்தம் அமைந்த திருப்புகழைப் போலச் சந்தக் கவி பாடியவர்கள் மிக அரியர். அதுவும் ஒரு பாட்டா, இரண்டு பாட்டா? பதினாயிரம் திருப்புகழ்களையல்லவா மேகம் போலப் பொழிந்து தள்ளியிருக்கிறார்? தமிழர்களுடைய இழவூழால் அவற்றில் பெரும்பாலன மறைந்தன. சற்றேறக்குறைய 1300 பாடல்களே இப்போது கிடைத்திருக்கின்றன.

பிரபுடதேவராயன் காலத்தில் வாழ்ந்தவர் அருணகிரிநாதர். அம்மன்னன் 16-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்தவன் என்று தெரிய வருகிறது. அக்காலத்தில் கருநாடக அரசர்கள் இப்பக்கத்தில் ஆண்டதனால் கன்னடத்துக்கு அதிகச் சலுகை இருந்து வந்தது. அப்போது தமிழில் வில்லிபுத்தூரார் சிறந்த கவிஞராகத் திகழ்ந்தார். அவருடைய வாக்கில் முடுகு நடை விரவிய கவிகள் பல உண்டு. அருணகிரிநாதர் வெள்ளம் போலச் சந்தக் கவியைப் பாடிய காலமாதலின் வில்லிபுத்துரரும் சந்த விருத்தங்களைப் பாடினர் போலும்!

புதிய வகையில் சந்தக் கவி பாடியது மாத்திரமன்று; முருகனைப் பற்றியே அவ்வளவு பாடல்களையும் பாடினார். அதற்குமுன் முருகனைத் துதித்த பாடல்கள் தமிழில் இருந்தாலும் ஒரே புலவர் இத்துணைப் பாடல்களைப் பாடவில்லை. அதற்கு முன் முருகனைப் பற்றிப் பாடிய கவிகளைத் தொகுத்துப் பார்த்தால் அத்தனைக் கவிகளுக்கும் அதிகமாகவே அருணகிரியார் பாடினார் என்பது தெரியவரும். அருண்கிரியார் பாடலில் இது இரண்டாவது சிறப்பு.