பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

சொன்னாலும் பொருத்தமாக இருக்கும். என்றும் அழகியவனாய், என்றும் இளமையோடு இருக்கிற முருகனை இந்தக் குவலயம் குறிஞ்சிக் கிழவன் என்று சொல்லலாமா? நித்திய யெளவன சுந்தரமூர்த்தி அல்லவா அவன்?' என்ற நினைவு தோன்றியது.

என்றும் இளையவன்

ன்றும் இளையபிரானாக, சதா பால ரூபத்தை உடையவனாக முருகன் இருக்கிறான். பாலசுப்பிரமணியன் என்ற பெயரிலிருந்தே அவன் எப்போழுதும் பாலனாக இருக்கிறான் என்பது தெரியும். பாலன் என்றாலே முருகனைக் குறிக்கும்.

வடக்கே திருவேங்கட மலை இருக்கின்றது. அங்கே வேங்கடேசப் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். அங்கே முருகன்தான் எழுந்தருளியிருக்கிறான் என்று சிலர் சொல்வார்கள். இல்லை என்று சிலர் மறுப்பார்கள். அதைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அங்கே திருமால் இருக்கிறார். முருகனும் இருந்தான். முருகன் கோயில் அங்கே இருந்ததற்குப் பல அடையாளங்கள் உண்டு. அங்கே எழுந்தருளியிருக்கும் திரு மாலை நாம் எல்லோரும் வேங்கடேசுவரன் என்று சொல்கிறோம். வைணவர்கள் ஸ்ரீ நிவாசன் என்று சொல்வார்கள். ஆனால் வடநாட்டிலிருந்து வருகிறவர்கள் எல்லோரும், "பாலாஜி, பாலாஜி" என்று சொல்லுவார்கள். பாலாஜி என்பது பாலன் என்ற பொருளுடையது. அப்பெயர் முருகனுக்கே உரியது. குழந்தைப் பெருமானாகிய முருகன் திருவேங்கட மலையில் பழங்காலம் முதற்கொண்டே ஆட்சி பெற்று வந்திருக்கிறான் என்பதற்கு இந்தச் சொல்லும் ஒரு சான்று. இவ்வாறு என்றும் இளையவனாக, சதா பால ரூபத்தோடு இருக்கிற முருகனைக் குறிஞ்சிக் கிழவன் என்று சொல்லலாமா?

குழந்தையின் செயல்கள்

முருகன், உருவத்தில் மாத்திரம் இளையவன் அல்ல. பல வகைப்பட்ட அவன் செயல்களும் குழந்தைக்கு உரியனவாக உள்ளன. குழந்தைப் பருவத்துக்குரிய இலக்கணங்கள் சில உண்டு. குழந்தை தொட்டிலில் படுத்து விளையாடும். தொட்டிலில் இட்டுத் தாலாட்டும் பருவம் குழந்தைப் பருவம். "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்ற பழமொழியில்

164