பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வள்ளிகோன் உபதேசம்

உபதேசம்

"வள்ளிகோன் அன்று உபதேசித்தது ஒன்று உண்டு” என்று முருகன் தமக்கு உபதேசித்தாகச் சொல்கிறார். ஒரு மாணாக்கனுக்கு ஒரு நூலில் ஒன்று விளங்கவில்லை. அதை ஆசிரியன் விளங்கும்படியாகச் சொல்கிறான். நூலிலுள்ள பொருள் விளங்க வில்லையானால் அதற்கு உரை கூறி விளக்குகிறான். இவையாவும் உபதேசங்களே. வேறு சிலர் மந்திரங்களை உபதேசிக்கிறார்கள். மந்திர குருவினுடைய உபதேசத்தையே பெரும்பாலும் உபதேசம் என்று நாம் வழங்கி வருகிறோம். உலகம் நிலையாதது என்பதையும் இறைவன் நிலை இன்னதென்பதையும் வேறு சமய உண்மைகளையும் ஒரு பெரியவர் சொல்கிறார். அவரும் உபதேசம் செய்கிறவரே. சமயப் பிரச்சாரம் செய்கிறவரை உபதேசியார் என்று சிலர் சொல்கிறார்கள்.

இத்தனை உபதேசங்களும் அறிவிலே தெளிவாகப்பதிகின்றன. முன்பு தெரியாமல் குழம்பியிருந்த அறிவில் இப்போது உபதேசத்தால் தெளிவு உண்டாகிறது; உபதேசித்த பொருள் பதிகிறது. அதன் பயனாக உபதேசம் பெற்றவர்கள் மற்றவர்களுக்கும் அந்தப் பொருளை விளக்கும் ஆற்றல் பெறுகிறார்கள். தாம் உபதேசத்தால் அறிந்த ஒன்றைப் பிறருக்குச் சொல்லும் வன்மை அவர்களுக்கு அமைகிறது. அவர் பெற்ற உபதேசம் அப்படிச் சொல்லும் எல்லைக்குள் அடங்கியிருப்பது.

இங்கே, வள்ளிகோன் உபதேசித்தது எப்படி? எதை உபதேசித்தான்? அவன் அறிவிலே பதியும் உபதேசத்தோடு நிற்கவில்லை. அறிவிலே தெளிவுண்டாக்கும் உபதேசம் பிறருக்கு மீட்டும் சொல்லத்தக்க இயல்பை உடையது. "முருகன் தங்களுக்கு உபதேசம் செய்த அந்த ஒன்றை எங்களுக்குச் சொல்லுங்கள்" என்று அருணகிரியாரைக் கேட்டால் அவர், "அந்தோ! அதைக் கூற இயலாதே! கூறும் வன்மை எனக்கு இல்லையே! கூறத்தக்க வன்மையுடையவர்களின் வன்மைக்கு அகப்பட்டது அல்லவே!" என்று சொல்கிறார். "கூறவற்றோ?" என்று பாட்டில் வருகிறது. ஏன் அப்படிச் சொல்கிறார்?

அறிவு, அநுபவம் என்று இரண்டு உண்டு. மனத்தின் பகுதி அறிவு. புத்தியில் பதிகின்ற தெளிவே அறிவு விளக்கம். முருகன்

283