பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஐந்து பகைவர்

அதுபோல இறைவன் என்ற முளையை அடித்து, ஐந்து பொறிகளான மாட்டை அந்த முளையோடு நீண்ட கயிற்றினால் கட்டி மேய விடுங்கள். நன்றாகச் சாப்பிட வேண்டுமென்று நாக்கு விரும்புகிறது. "சாப்பாடா வேண்டும்? வா கோயிலுக்கு. அங்கே நல்ல சர்க்கரைப் பொங்கல் கொடுக்கிறார்கள். புளியோதரை கொடுக்கிறார்கள். அவற்றை வாங்கி நன்றாகச் சாப்பிடு" என்று சொல்லுங்கள். சர்க்கரைப் பொங்கல் வேண்டுமென்ற நாவின் ஆசையை இங்கே நாம் அடக்கவில்லை. ஆனால் இறைவன் பிரசாதத்தைச் சாப்பிட வேண்டுமென்ற நாட்டத்தை எழுப்புகிறோம். ஆண்டவன் என்ற முளையை அடித்துவிட்டதால், ஆண்டவனுடைய பிரசாதத்தைச் சாப்பிட வேண்டுமென்ற ஆசை எழுகிறது. இதனால் இறைவனுடைய தொடர்பு உண்டாகிறது. சர்க்கரைப் பொங்கல் சாப்பிட வேண்டுமென்ற ஆசை அப்படியே இராது. வர வரக் குறைந்து கொண்டே வரும். இறைவனுடைய சம்பந்தமுள்ள பொருள்களையே நாடும்படியாக முளையடித்து விட்டால் ஒழுங்கற்ற பொறிகளிடம் ஒரொழுங்கு உண்டாகும். அவை யாவும் கடைசியில் வேறு ஒன்றையும் நாடாமல் செயலற்று நிற்கும் நிலைமை வந்து விடும்.

இந்தக் கண் அழகான காட்சிகளைப் பார்த்துக் களிக்க விரும்புகிறது. அதற்கு, "நீ எதையும் பார்க்காதே" என்று சொல்ல வேண்டாம். “அழகான பொருள்களைத்தானே பார்க்க வேண்டுமென்கிறாய்? விதம் விதமான வண்ணத்தைக் கொண்டு தீட்டிய இந்த ஆண்டவன் படத்தைப் பார்? அழகழகான பூக்களாலும், மணியாலும் அலங்கரித்துள்ள ஆண்டவனுடைய விக்கிரகத்தைப் பார் என்று சொல்ல வேண்டும். தன் இச்சைப்படியே அது பார்க்கிறது. பார்க்கும்போதே ஆண்டவனுடைய தொடர்பு அதற்கு ஏற்படுகின்றது. காது இனிமையான சங்கீதத்தைக் கேட்க வேண்டுமென்று விரும்புகிறது. அப்போது, "நீ எதையும் கேட்காதே" என்று சொல்ல வேண்டாம். "இனிமையான சங்கீதத்தைத்தானே கேட்க வேண்டுமென்று விரும்புகிறாய்? அதோ பாடுகிறார்கள் கேள், தேவாரத்தை, திருப்புகழை" என்று சொல்ல வேண்டும். தன் இச்சைப்படியே அது அந்த இனிமையான சங்கீதத்தைக் கேட்கிறது. கேட்கும்போதே ஆண்டவனுடைய தொடர்பு அதற்கு ஏற்படுகிறது. இப்படியே ஒவ்வொரு புலனையும் ஆண்டவன்

141