பக்கம்:கஞ்சியிலும் இன்பம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை
ல ஆண்டுகளாக நாடோடிப் பாடல்களைத் தொகுத்து வரும் முயற்சியில் நான் ஈடுபட்டிருப்பதை அன்பர்கள் அறிவார்கள், இதற்குமுன் "நாடோடி இலக்கியம்" என்ற பெயரோடு ஒரு புத்தகம் வெளியாகியிருக்கிறது. அது வெளியானபின் நாடோடிப் பாடல் களைப்பற்றிய கவனம் தமிழ் நாட்டினருக்கு அதிகமாகியிருப்பது தெரிந்து மகிழ்ச்சி அடைகிறேன். ரேடியோவில் மாதந்தோறும் நாடோடிப் பாடல்களைப் பாடுகிறார்கள். நாடோடிப் பாடல்களின் போலி பலவும் இப்போது நாட்டில் உலவுகின்றன. பலர் அவற்றையே நாடோடிப் பாடல்கள் என்று எண்ணிவிடுகின்றனர்.


கிராமத்திலே உள்ள மக்கள் வேலை செய்யும்பொழுதும் பொழுது போக்கும்பொழுதும் விளையாடும்பொழுதும் பாடும் நாடோடிப் பாடல்கள் இன்னாரால் இயற்றப் பட்டவை என்ற நியதிக்கு உட்படாதவை. காலந்தோறும் இடந்தோறும் பரவி, மாறியும் விரிந்தும் சுருங்கியும் வழங்குபவை. இய்ற்கையோடு ஒட்டி வாழும் உள்ளமும் வாழ்க்கையும் உடையவர்களுடைய உணர்ச்சியையும் செயல்களையும் வெளியிடும் அப் பாடல்கள் புலவர் உலகத்துக்குப் புறம்பே நிற்பவை. நிற்கிறது என்பதை நிக்குது என்றும், ஆயிற்றென்பதை ஆச்சு என்றும் மாற்றிக் கொச்சைமொழிகளை நிரப்பிப் பாடினுல் நாடோடிப்பாட்டு ஆகிவிடுமென்று சிலர் நினைக்கிறார்கள். காட்டிலே மலரும் மலரைப்போலச் செயற்கையின் வேலைப்பாடுகளின்றி மலரும் பாடல்களாகிய அவற்றைப்போல நாகரிக வாழ்க்கையில் ஈடுபட்ட மக்கள் பாட முடியாது; அநுபவிக்கவே முடியாதே! குழந்தை பேசும் மழலைச் சொல்லைப்போல் ஒருவர் பேச முடியுமானால் நாடோடிப் பாடல்களைப் போலப் புலவன் பாடலாம். இரண்டும் இயலாத காரியம்