பக்கம்:உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

உடம்பைக் காப்பாற்றும் ஒன்பது இரகசியங்கள்!

வாழ்க்கையில் வெல்வது என்பது நமது இலட்சியமாகும். அந்த வேள்விக்கு வழிகாட்டுவது இலக்கியமாகும்.

எதிலும் வெல்வது என்பது, எல்லோருடைய எண்ணங்களின் எழுச்சிதான் என்றாலும், எத்தனை பேர் வெற்றி மேடையிலே வீற்றிருக்கின்றார்கள்? வெற்றியின் வாசலிலே வந்து எத்தனையோ பேர் காத்துக் கிடக்கின்றார்கள்? காலம் கை கொடுக்குமா? கற்பனை சுகமளிக்குமா? கடவுளின் கருணை கடாட்சம் வெளிப்படுமா? என்று, பொய் மானை விரட்டிக் கொண்டு புயல் வேகத்தில் போகிற காலில்லா முடவனைப் போலவே, காலம் கழிக்கிறார்கள்.

சொல்லவந்ததைச் சுறுக்கென்று சொல்லி விட வேண்டும். இழுத்துப் பிடித்துக் கொண்டு, கேட்பவரின் காதுகளை அறுத்துக் கொண்டு, ஒரு நூதன காரியத்தைச் செய்கின்ற மற்ற எழுத்தாளர்களைப் போலல்லாமல், நாம் நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடுவோம்.