பக்கம்:ஆலமரத்துப் பைங்கிளி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140


கடிதத்தின் உறை கழன்றது. உரை வாய் திறந்து கொண்டது.

“அன்புடைய ராமலிங்கம்,

என்னை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்; மறந்திருக்கவும் முடியாது. ஆம்; உங்களுடைய மாஜி முதலாளியான திருப்பதியே தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். தவறுகளே மன்னிப்பவனே மனிதன் என்பதன் உண்மையை உணர்ந்தவன் நான். அன்று நீங்கள் செய்த குற்றத்தை என்றாே மன்னித்த நான், இப்போது உங்களிடம் என் தப்பை மன்னிக்கும்படி கெஞ்சுகிறேன். புதிராகத்தான் தோன்றும். உங்களிடம் சில காலம் வேலை பார்த்த கந்தப்பன் என் மகன். நானேதான் உங்களிடம் அனுப்பினேன். அவன் என் மகன் என்ற உண்மையையும் மறைக்குமாறு எச்சரித்தவனும் நானேதான். ஊழ்வினைப் பயனாக என் நிலை தலைகீழானது. வறுமை ஆட்டிப் படைத்தது. மனைவியை இழந்த எனக்குக் கடைசிக் காலத்தில் என் மகனே ஐந்து, பத்து அனுப்பி உதவினான். ஆனால் உங்கள் பணத்திலிருந்து நூறு ரூபாயைத் திருடி வந்து என் நோயைப் போக்கப் பிரயத்தனப்பட்ட நடப்பு நேற்று முன் தினம்தான் எனக்குத் தெரிந்தது. என் நெஞ்சே என்னைச் சுட்டது. மணச்ச நல்லூரில் என் பூர்வீகச் சொத்தாக மிஞ்சி நின்ற என் வீட்டை விற்று, உங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை அனுப்பியிருக்கிறேன். மிகுதிப் பணத்தில் என் மகனுடைய எதிர்கால வாழ்வுக்கு அடிகோலும் வகையில் சிறிய மளிகைக் கடை ஒன்றையும் தொடங்கிக் கொடுத்துள்ளேன். என் மைந்தன் செய்த தவற்றுக்குத் தண்டனையை நான் அன்றே அளித்துவிட்டேன். நீங்களும் மன்னித்து விடு