183
போகிறோம்? எண்ணிச் சில நாள் பொறுத்திரு” என்று பார்வதி சொன்னது, கண்ணனுக்கு என்னவோ அமைதியூட்டவில்லை.
ராதை ஊருக்குப் புறப்பட்டபோது அவள் கண்களில் நீர் மின்னிய காட்சி மட்டும் அடிக்கடி கண்ணனின் மனத்திரையில் நிழல் வடிவிட்டது.
✽✽✽
நாட்கள் கழிந்தன.
ராதை ஊருக்குச் சென்றதிலிருந்து கண்ணனுக்கு எதிலுமே மனம் செல்லவில்லை. விளையாட்டு, கோலி ஆட்டம் என்றால் பிராணனைவிடும் அதே கண்ணன் அன்று விளையாடும் இடத்தைக் கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை. பித்துப் பிடித்தவன் போலச் சதா காணப்பட்டான். ஒரு நாள் ராதையின் மணல் வீட்டை அழித்து விட்டானல்லவா? அந்தத் துன்ப வடு அவன் குருத்து மனதைக் குடைந்தது.
கண்ணனுடைய இந்த மாறுதலைக் கண்ட அவன் பெற்றாேர்கள் திகைப்படைந்தனர்.
“கண்ணா, உடம்புக்கு ஏதாவது பண்ணுதா? டாக்டரைக் கூட்டி வரட்டுமா? ஏன் இப்படி என்னவோ போல ஒரு மாதிரி இருக்கே...” என்பதாகத் தாயும் தந்தையும் மாறிமாறி வினவினார்கள்.
பெற்றோர்கள் நச்சரிப்புக்குப் பயந்தோ என்னவோ அன்று உண்மையை வெளியிட்டான் குழந்தை.
“அம்மா, அப்பாவிடம் சொல்லி என்ன நம்ப ராதைகிட்டே அழைச்சுட்டுப் போகச் சொல்ல மாட்டியா?” என்று அழாக் குறையாகக் கூறினான்.