பக்கம்:உயிரில் கலந்தது.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

94

சொல்விவந்த சொற்கள் பின்தங்கின்—தோணி போய்விடும். கரை பின்தங்கிவிடும் என்ற இந்தக் கதையாக!...

அழைப்பு அனுப்பவேண்டிய முகவரிகளை நோட்டில் தயாரிப்பதில் உதவினார்கள் நண்பர்கள். கதாசிரியை குந்தவையின் கடிதத்தைப் பார்த்ததும், அதையும் தம்முடையகைப்படவே சேர்த்தார். தவசீலியின் பெயரும் விட்டுப்போயிருந்தது. ஒட்டினார்.

ஆனால் அவளுடைய தற்போதைய சரியான விலாசம் தெரியவில்லை. ‘தவசீலி’யின் நினைவு காலப்பணி மூட்டத்தைக் கடந்து சென்றது. ஒரு முறை ஆபீசுக்கு வந்திருந்த தவசீலியின் கடிதத்தைப் படித்ததும், அவரது இதயத்தின் இதயம் சந்தோஷப்பட்டதையும், அந்த நிறைவில் அவள் கடிதத்தையே திரும்பப் படித்த விசித்திரத்தையும் அவர் அவ்வளவு லகுவில் மறக்க முடியாதல்லவா? இப்படிப்பட்ட மனச்சலனங்கள் விட்டகுறை—தொட்டகுறையின் விளைவாகக்கூட இருக்கமுடியும் என்று ஒருமுறை படித்த மேலைநாட்டுத் தத்துவச் சிந்தனை இப்பொழுது அவரை முயங்கியது! “என்றென்றுமே உங்கள் நிழலில் ஆண்டி ஒண்டும் பெரும் பேற்றினை எனக்கு அருளச் செய்வீர்களா?” என்றபடி தவசீலி எழுதியிருந்த வரிகள் எதிரொலித்தன.

ஒரு நாள்: அலுவலகத்தில் ‘அட்வான்ஸ்’ கிடைக்காமல், எதிரிலிருந்த கரிக்கடை சாயபுவிடம் ஐம்பது ரூபாய் வாங்கிக் கொண்டு, தவசீலியின் தந்தையைப் பார்த்துவர ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு ஆட்டோவில் சென்றார். வழியில் சாவுடன் மோத விரும்பி, ஆட்டோவுடன் மோத ‘வேண்டுமென்றே’ ஓடிவந்த அசல் பிச்சைக்தாரன் ஒருவனது உயிரைக்காத்த கடமையும் குறுக்கிட்டது. “என் பசி என் ஒருவன் பசியல்ல; நாற்பது கோடி மக்களின் பசி” என்று வினோபாஜி கூறினாரே! கண்ணிர் மல்க, அவனைப் பார்த்தார்; கேட்டார்.

“ஏனப்பா, நீ இப்படிச் சாகத் துணிந்தாய்?”

“என்னலே பசி தாளமுடியலை ஸார்!"