பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

பாடுகள் பெற்று விளங்கியது என்பதைச் சிலப்பதிகாரம் மதில்களில் அமைந்த பொறிகள் இன்ன என்பதைக் குறிப்பிட்டிருப்பதிலிருந்து நாம் உணரலாமே. இதனை உட்கொண்டன்றோ “மதி மலி புரிசை” என்றனர் மதிமுடி சொக்கேசர்.

“மாடக் கூடல்” என்பதும் பொருள் பொதிந்த தொடராகும். மதுரையம்பதியில் குடிவளத்தையும், அக் குடிமக்கள் வாழும் கட்டட அமைப்புக்களையும் காட்ட எழுந்த தொடரே இது. இவ்வாறே நாட்டின் மாடங்களைச் சிறப்பித்து, “செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கி” என்று ஞானசம்பந்தப் பெருமானார் நவில்வதனாலும் அறிந்து கொள்ளலாம்.

“அன்னம்பயில் பொழில் ஆலவாய்” என்பது மதுரையம்பதியின் நீர்வளத்தையும் நில வளத்தையும் குறிப்பதாகும். நீர் மிக்கு இருந்தாலன்றி, அன்னங்கள் வாழா அல்லவா? “அன்னங்கள் பயிலும் ஆலவாய்” என்பதனால், நகரில் பல சோலைகள் அமைந்து, அச்சோலைகளில் நீர் நிலைகளும் பொருந்தி, மக்கள் மாலை நேரங்களில் நறுமணமும், நல்ல தென்றலும் துய்க்க அங்ககரினை அமைத்திருந்தனர் நகராண்மைக்கழகத்தினர் என்பதும் தெரிய வருகின்றது அன்றோ? இதனால், அக்கால நகராண்மைக் கழகத்தினர் நற்றோண்டும் புலனாகிறது.

இங்ஙனம் இறைவனார், மதுரையம்பதியின் மாண்தரு வளங்களை முன்னர் அறிவித்துத் தம் திருமுகத்தினைத் தொடங்குவதன் உட் பொருள், வளமற்ற,வரண்ட நகரத்தினின்று எழுதப்பட்டதன்று என்பதன் பொருட்டும், பாணபத்திரரது வறுமையைப் போக்கத்தக்க வளம் இல்லாதது போலும் என்று சேரர் எண்ணாதிருக்கும் பொருட்டும் இவ்வாறு மதுரையினைச் சிறப்பித்தனர் என்க. எழுதுகின்றவர் இறைவர் என்பதையும்