பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

வேறு அவர்களைக் குறித்து என்ன கூறுவது?

“மகவுடை மகடூஉப் பகடுபுறந் துரப்ப”

என்னும் அடியினைப் பெரும்பாணாற்றுப் படையில் பார்க்கும் பொழுது, எருதுகளை முதுகில் புடைத்து வண்டிகளைப் பூட்டும் திறம் மாதர்கள் பெற்றிருந்தனர் என்பது பெறம்படுகின்றதன்றோ? உந்து வண்டிகளை ஓட்டுவதுகூட எளிது. ஆனால், பீடு நடைக்கு ஒரு பெரிய எடுத்துக்காட்டாக உள்ளதும், வீரத்திற்கு உறைவிடமாக உள்ளதுமான எருதுகளின் முதுகினை அடித்து அதட்டி ஓட்டும் ஆண்மையினைத் தமிழக மாதர் பெற்றிருந்தனர் என்றால், அவர்கள் மென்மையுடன் வன்மையும் கலந்த வனிதையர்கள் என்பது அறியக்கிடக்கின்ற தன்றோ!

தமிழர்கள் வீரத்திலும் சிறந்தவர்கள் என்பதற்குப் பல சான்றுகள் நம்தண்டமிழ் நூல்களில் காணப்படுகின்றன. இப்பத்துப்பாட்டில் மாதர்கள் வாள் ஏந்தி அரசனை அல்லும்பகலும் போர்க்களத்தில் மெய்க் காப்பாளராக இருந்து காத்து வந்தனர் என்பதைப் படிக்கும்போது உணர்ச்சியற்றவரும் வீரம் கொண்டு எழவேண்டியவர்களாவார்.

“குறுந்தொடி முன்கைக் கூந்தல் அம் சிறுபுறத்து
இரவுபகல் செய்யும் திண்பிடி ஒள்வாள்

விரவுவரிக் கச்சில் பூண்ட மங்கையர்.”

என்பன முல்லைப்பாட்டு அடிகளாகும்.

இன்னோர் அன்ன நயங்கள் பலபடப் பொதிந்து இப்பத்துப் பாட்டுக் காணப்படுகின்றது. அந்நூலைத் துருவி அறிந்து சுவைத்து இன்பம் பெறுதல்தக்கதாகும்.