பக்கம்:அமுதவல்லி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 11

    சோமலிங்கம் கண்ணடியைத் துடைத்துப் போட்டுக் கொண்டு சுற்றிச் சூழ நோக்கினான். நூல் பிடித்த மாதிரியாகப் போடப்பட்டிருந்த மேஜை நாற்காலிகளும், மேஜைக்கு அணிகலன்களெனத் திகழ்ந்த ரோஜாப்பூக் குழல்களும் கண்ணுக்குப் பெரு விருந்தெனவே தோன்றின. அவன் நீள் மூச்சை விலக்கினான். எஜமானி அம்மாவுக்குத் திருப்தி ஏற்பட்டுவிடும்!” என்ற ஆறுதல் 

அவனுடைய கடமையுணர்வுக்கு நற்சாட்சிப் பத்திரம் வழங்கிற்று. இள நீல நிறப் பாதரஸ் விளக்குகளின் விசைகளை ஒரு முறை அழுத்தினான். நிலவும் ஒளியும் சதிராடின; அதுசமயம் புத்தம் புதியதொரு சுற்றுச் சார்பு உருவானதைப்போல அவன் உணரலானான். மிதியடி பின் ஒசைக்குச் சட்டம் அமைத்துக் கட்டுப்பாடு விதித்தவாறு அவன் நடந்தான்; திரும்பினான்.

  "ஏ, வேலப்பா!"
  "ஐயா!"
    "மாடிப்படியிலே பூச்செடியோட இலைகளெல்லாம் சிந்திக்கிடக்குதே, அதையெல்லாம் ஒண்ணு விடாம எடுத்துக் கீழே கொண்டு போய்ப் போடுவததை விட்டுவிட்டு, என்னமோ யோசனையிலே மலைச்சுப்போய் நிற்கிறீயே? ம்.போ!"
    "ஆகட்டுமுங்க, ஐயா!" என்று பணிவுடன் இணக்கம் காட்டிய வேலப்பன் தாடி மீசையைத் தடவி விட்டுக்கொண்டே இறங்கியபோது, அவனுடைய கை விரல்களில் ஈரம் தட்டியது. இட்ட பணியை இதமுற இயற்றும் பாங்குடன் இருந்த வேலப்பன் குனிந்த தலையை நிமிர்த்தினான், சோம லிங்கம் நின்றான்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/13&oldid=1179817" இலிருந்து மீள்விக்கப்பட்டது