பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

சாயங்கால மேகங்கள்

பூமிக்கோ சித்ராவுக்கோ முத்தக்காளின் போக்கு எந்த அதிர்ச்சியையும் அளிக்கவில்லை. ஏற்கெனவே அவர்கள் எதிர் பார்த்ததுதான். பாமரர்களும், பெரும்பாலான நடுத்தர மக்களும் தங்களைக் காட்டிலும் வலிமையுள்ள தீயவர்களை நேரடியாக எதிர்த்துக் கொள்வதை விட அவர்களுக்கு விட்டுக் கொடுத்துத் தன்னைக் கட்டிக் கொண்டு காரியத்தைச் சாதித்துக் கொள்வதையே விரும்புவார்கள் என்பது பூமி ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். பூமிதான் பேச்சைத் தொடங்கினான்.

“நடந்து நடந்துவிட்டது, கவலைப்படாதீர்கள். உங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்.”

“பார்க்கிறத்துக்கு இனிமே என்ன மிச்சமிருக்குத் தம்பீ? அதான் எல்லாம் போயாச்சே”

முத்தக்காளின் குரலில் கோபமும் அதனோடு கலந்த விரக்தியும் இணைந்திருப்பது தெரிந்தது. ஏற்கனவே கணவனை இழந்ததால் ஏற்பட்டிருந்த விரக்தி இப்போது இன்னும் அதிகரித்திருப்பதாகத் தெரிந்தது.

“பாத்திரம் பண்டம், அம்மி, உரல் எல்லாத்தையுமே அடிச்சு நொறுக்கிப் போட்டுட்டாங்களே! எப்புடியப்பா இனிமே மெஸ்ஸை நடத்துவேன்? நான் தனிக்கட்டை. யார் உதவியோட எதை முதலாப் போட்டு இதை எல்லாம் சரிப்படுத்துவேன்?” என்று அழத் தொடங்கிவிட்ட முத்தக்காளை எப்படி ஆறுதல் கூறி அமைதியடையச் செய்வதென்று புரியாமல் அவர்கள் தயங்கினார்கள்.

முத்தக்காள் மிகவும் அதிர்ச்சியடைந்துதான் போயிருந்தாள். அவளிடம் பேசி ஆறுதல் கூறிக் கொண்டிருப்பதைவிடச் செயலில் காட்டுவதுதான் சரி என்று தோன்றியது பூமிக்கு. தன்மேல் அவளுக்கு நம்பிக்கையும் பற்றும் வருவதற்கு அது ஒன்றுதான் வழி என்பது தெரிந்தது.

சம்பிரதாயமாக’ உடம்பைப் பார்த்துக் கொள்ளுமாறு முத்தக்காளிடம் கூறிவிட்டுப் புறப்பட்டார்கள். சித்ரா