பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

171

யும், அத்தனை கெட்ட பேரையும் சம்பாதித்துக் கொண்டு துணிந்து முன் நின்று தீமையை எதிர்த்து நல்லதைச் சாதித்த பின் முன்பு ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த அத்தனை பேரும் அந்த நல்லதில் பங்கு கேட்டு வருவார்கள். இந்தியாவின் படித்த நடுத்தர வர்க்கம் அல்லது வெள்ளைக்காலர் வர்க்கத்தின் இலக்கணம் இதுதான்.

“அந்த இலக்கணத்தை இனிமேலாவது மாற்றியாக வேண்டும் அல்லது மீறியாவது தீர வேண்டும்.”

“என்னுடைய முப்பத்தெட்டு வருட உத்தியோகம் அநுபவத்தில் இதை மாற்ற முயன்றவர்களையும் மீற எத்தனித்தவர்களையும் குறைந்த அளவில் கூட பார்த்ததில்லை.”

“அது பழைய தலைமுறை! இனி இந்தத் தலைமுறையில் இது அப்படி இராது. தீவிர மாறுதல் ஏற்படும்”

“நம் நாட்டைப் பொறுத்தவரையில் தலைமுறைகள்தான் மாறுகின்றனவே ஒழிய மனிதர்கள் ஒன்றும் மாறுவதில்லை.”

அந்த ஓய்வு பெற்ற கல்வித்துறைப் பிரமுகர் நாட்டின் மந்த கதியைப் பற்றி மிகவும் சசப்புடன் கோபத்துடனும் பேசினார்.

இன்று இருக்கும் அதே இலட்சிய வேகத்துடனும் சுறுசுறுப்புடனும் சுயமரியாதை உணர்வுடனும் தான் தமது இளமையில் தாம் இருந்ததாகவும் அதற்கு இந்த நாடு தயாராகவோ பக்குவமாகவோ இல்லை என்பதாகவும் அவர் குறைபட்டுக் கொண்டார்.

“சில சமயங்களில் விளக்கின் அடியில்தான் இருட்டு அதிகமாக இருக்கும். அந்த மாதிரிக் கல்வித் துறையில் தான் ஊழல்களும், பொருமையும் அதிகம் என்பது என் அநுபவம்.”

அவரிடம் அதிக நேரம் பேசி யோசனை கேட்டுக் கொண்டு திரும்பினார்கள் பூமியும் பரமசிவமும், ஆசிரியைகளின் குறைகளையும், அவர்கள் சார்ந்திருந்த பள்ளியின் முறைகேடுகளையும், ஊழல்களையும் ஒரு மகஜராகத் தயாரித்து, அந்த மகஜரில்