பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

141

"அவனுக்குத் தெரிந்த புரட்சி அவ்வளவுதான், அவன் பணக்காரன், அந்தக் காம்ப்ளெக்ஸில் ஒன்றும் புரியாமல் புரட்சி புரட்சி என்று பேசித் தீர்க்கிறான்.”

“உண்மையான புரட்சி என்பது பேசப்படுவதில்லை. தீவிரமாகச் செய்யப்படுவது. பம்பரம் மிக வேகமாகச் சுழலும் போது சத்தமே கேட்காது. சுற்றுகிறதா நிற்கிறதா என்றுகூடச் சந்தேகமாயிருக்கும், தீவீரப் புரட்சியும் அப்படித்தான்.”

அவனுடைய விளக்கம் அவளுக்குப் பிடித்திருந்தது, “உங்கள் உவமை அழகாயிருக்கிறது” - என்று பாராட்டினாள் அவள்.

“ஓர் உவமை அழகாயிருக்கிறது என்று பாராட்டப்படுவதற்குப் பதில், ஆழமானதாயிருக்கிறதென்று பாராட்டப் படவும்-புரிந்துகொள்ளப்படவும் வேண்டுமென்று நினைக்கிறவன் நான்! சில சமயங்களில் தத்துவார்த்தத்தின் வறுமை அல்லது வெறுமையே சொற்களின் அழகிய கோவைபோலத் தோன்றும், ‘தி பாவர்ட்டி ஆஃப் பிலாஸ்பி’ என்று மார்க்ஸ் ஒரு நூலையே இப்படிப் பேரில் எழுதியிருக்கிறார்.”

இப்படி அவன் பேசும்போதெல்லாம் ஆச்சரியத்தில் திளைத்தாள் சித்ரா, திரைப்படம் முடிந்ததும் மெஸ்ஸூக்கு அவசரமாகப் போகவேண்டும் என்றான் அவன். அவள் போகும்போது அவனைக் கேட்டாள்: “நீங்கள் பெரும்பாலும் ஏன் படங்களுக்கு விரும்பிப் போவதில்லை?”

“அளவு மீற மிகைப்படுத்தப்பட்ட நற்குணங்களுள்ளவர்களும் அதே போல மிகைப்படுத்தப்பட்ட தீய குணமுள்ளவர்களும் வருகிற மாதிரி நமது திரைக்கதைகள் அமைவதால் எனக்குப் பிடிப்பதில்லை. நன்மையும் நம்பும் படியாக இல்லை! தீமையும் நம்பும்படியாக இல்லை”

“இந்தப் படம் உங்களுக்குப் பிடித்திருந்ததா?...”