பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

217

சித்ரா, லெண்டிங் லைப்ரரி பரமசிவம், பூமியிடம் கராத்தே கற்பதற்காகத் தேடிவரும் இளைஞர்கள். யாரையுமே. அவள் வெறுத்தாள். இவர்களால்தான் பூமி மெஸ்ஸையே கவனிக்காமல் அடிக்கடி பொது வேலைகளுக்காக ஊர் சுற்றப் போய்விடுகிறான் என்று அவள் எண்ணினாள். இவர்கள் பழக்கம் இல்லாமல், இவர்கள் தேடி வராமல் இருந்தால் பூமி மெஸ்ஸே கதி என்று கிடப்பான் என்பது அவள் கற்பனையாக் இருந்தது.

அவளுக்குள்ள சொற்ப அறிவு அந்த அளவுக்குத்தான் அவளை நினைக்கத் தூண்டியது. அறிவின்மையைச் சகித்துக் கொள்ளலாம். பாச உணர்வே அற்ற அறிவையும் சகித்துக் கொள்ளலாம். ஆனால் சொற்ப அறிவையும் அதை உடையவரிகளையும் சகித்துக் கொண்டு சமாளிப்பது மிகவும் சிரமமான காரியம்.

முத்தக்காளைச் சகித்துக் கொண்டு சமாளிப்பதில் பூமி சித்ரா இருவருக்குமே இப்படிப் பிரச்னை இருந்தது. முத்தக்காள் கொஞ்ச நாள் சுமுகமாக இருக்கிறாளே என்று நினைத்துத் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கும் போதே திடீரென்று மலரெல்லாம் உதிர்ந்து முள் செடியாக மாறி உறுத்துவாள் அவள். அடிக்கடி பூமியும் இதை உணர்ந்திருந்தான். சித்ராவும் உணர்ந்திருந்தாள்.

முதல் முறையாக கேஷ் டேபிளில் சித்ராவுக்கும் முத்தக்காளுக்கும் ஒரு சண்டை வந்தபோதே இனி மெஸ் பக்கம் தலைவைத்துப் படுக்கக் கூடாது என்றுதான் சித்ரா பிடிவாதமாக இருந்தாள். பூமி அந்தப் பிடிவாதத்தைக் கண்டித்தான். அவனுக்காக அவன் வார்த்தையை மதித்துத்தான் சித்ரா அங்கு மீண்டும் போய்ப் பழகிக் கொண்டிருந்தாள். முத்தக்காளைச் சகித்துக் கொண்டிருந்தாள்.

இன்று மீண்டும் முத்தக்காள் சண்டையைக் கிளப்பினாள்.

“அது யாரு அந்தப் பொம்பளை? யாரோ ஒருத்தியைக் கொண்டாந்து உக்காத்தியிருக்கீங்களே? இப்பிடி ஒரு