பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஐந்து பகைவர்

"பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்"

அத்தகையவர்கள் உள்ளீடு இல்லாதவர்கள். வெறும் நெல்லைப் போல இருப்பவர்கள் பலர் உண்டு. அவர்கள் தாம் பெற்ற வாழ்விலே எவ்வளவு சுகத்தை அநுபவிக்கலாமோ அவ்வளவும் அநுபவிப்பார்கள். ஆனால் இனிமேல் இந்த உலகத்தில் பிறவாமல் முத்தி இன்பத்தை அடைய இப்பொழுதே அஸ்திவாரம் போடுபவர் யாரோ அவர்கள் விதை நெல்லுக்கு ஒப்பானவர்கள். நன்றாக முற்றி விளைந்த நெல்தானே விளையும்? முற்றின இந்த நெல் முத்தியென்னும் உலகத்தில் விளைவதாகும். 'வரன்’ என்னும் வைப்பாவது முத்தியுலகம். பதினான்கு உலகங்கள் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். அவற்றை மூன்று தட்டுகளாகச் சொல்வார்கள். ஒன்று வானுலகம். மற்றொன்று பூவுலகம். இந்தப் பூவுலகத்திற்குக் கீழே இருப்பது மூன்றாவதாகிய பாதாள லோகம் என்பது. வானுலகம் மேலே இருக்கின்றது. பூவுலகம் மத்தியில் இருக்கின்றது. பாதாள லோகம் கீழே இருக்கின்றது. அவற்றை "அந்தர் மத்திய பாதலம்" என்று சொல்வார்கள். இந்த மூன்றுவகையான உலகங்களுக்கும் அப்பாற்பட்ட ஒன்று உண்டு. அதுதான் முக்தியுலகம். வானுலகந் தான் தேவலோகம். அதற்கும் மேலான உலகமாய் இருப்பது முத்தி. "வானோர்க் குயர்ந்த உலகம்" என்று திருவள்ளுவர் அதைச் சொல்வார்.

மாயா லோகமாகிய இந்தப் பூவுலகத்திலே வந்து பிறந்த ஆன்மா இன்ப துன்பங்களை அநுபவித்து, பக்தி மார்க்கத்திலே நின்று தவம் பண்ணி, ஆண்டவன் திருவருளைப் பெற்றுச் சிறந்து நின்றால், அது திரும்பவும் இந்த உலகத்திலே வந்து பிறவாமல், முத்தி உலகத்திலே போய் விளைகின்றது. இந்த ஆன்மாவானது. இந்தப் பூவுலகத்தில் வளர்ந்து விளைந்து கடைசியில் விதைக்குரிய நெல்லாக முற்றி முத்தி லோகத்தில் போய் விளைகின்றது. இன்ப துன்பத்திற்கு அப்பாற்பட்ட ஆனந்தத்தை அங்கே அடைகின்றது. இங்கே விளைந்த வித்து அங்கே போய் முளைக்கிறது.

தேவர்கள் நம்மைக் காட்டிலும் சிறந்த இன்ப வாழ்வை அநுபவிக்கிறார்கள் என்று நினைக்கிறோம். ஆனால் அவர்கள்

க.சொ.1-10

137