பக்கம்:சாயங்கால மேகங்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சாயங்கால மேகங்கள்

205

மெஸ் வேலைகளைக் கவனித்து வந்த அந்த மாணவன் மறு நாள் காலை லஸ்ஸிலிருந்து மெஸ்ஸுக்கு வரவே இல்லை.

காலை ஐந்து மணிக்கு வந்துவிட்டு ஒன்பதரை மணிக்குக் கல்லூரி செல்லும் அந்த மாணவன் மறுபடி மாலை ஐந்து மணிக்கு மெஸ்ஸில் வேலைக்கு வந்துவிட்டு இரவு ஒன்பதரை மணிக்கு வீடு திரும்புவான். திருட்டுத் தொழிலிலிருந்து பூமி அவனை மன்னித்துத் திருத்திய பின் இதுதான். அந்த மா ண வனின் நடைமுறை வாழ்க்கையாகி இருந்தது.

“எல்லாருமே திருடர்களாகப் பிறப்பதில்லை. சிலர் சமூக நிர்ப்பந்தங்களால் திருடர்கள் ஆக்கப்படுகிறார்கள். வேறு சிலர் சொந்த நிர்ப்பந்தங்களால் திருடர்களாகிறார்கள். சமூக நிர்ப்பந்தங்களால் வேறுவழியின்றித் திருடர்கள் ஆனவர்களை நாம் முயன்றால் திருத்தலாம். இந்தப் பையனை இன்று நான் மன்னித்து இங்கே வேலைக்குச் சேர்த்துக் கொள்கிறேன் என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இவனால் நமக்கு எந்தக் கெடுதலும் வராது. சமூக ஆதரவும் வேலை உத்தர வாதமும் இல்லாத காரணத்தால்தான் இதுவரை இவன் தவறு செய்திருக்கிறான். மிகுந்த ஏழைமையால் செய்யப்படும் தவறுகள்; மிகுந்த வசதியால் செய்யப்படும் தவறுகள் என்று. இன்றைய சமூகக் கோளாறுகள் இரண்டு வகையில் அடங்கும். அந்த இரண்டில் ஏழைமையால் செய்யப்படும் தவறுகளை நாம் மன்னித்துத் திருத்துவதற்குத் தயாராயிருக்க வேண்டும்.”

என்று பூமி அந்தப் பையனை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும் போது கூறியிருந்த விளக்கம் முத்தக்காளைத் திருப்திப்படுத்தவில்லை என்றாலும், அவள் அவனைக் தடுக்கவில்லை. பையன் வரவில்லை என்றவுடன் ஓடிவிட்டான் என்று முடிவு. கட்டிவிட்டாள் முத்தக்காள்.

பூமி அப்படி நினைக்கவில்லை. ‘மன்னாரு’ குழுவினரால் .. பையனுக்கு ஏதாவது நேர்ந்திருக்கக்கூடும் என்று பூமிக்குத் தோன்றியது: பையனின் வீட்டுக்கே தேடிப்போய் விசாரித்து விட எண்ணினான். அவனும் சித்ராவும், முத்தக்காளும் இதைப்